ETV Bharat / state

பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆண் வேட்பாளர் நின்ற விவகாரம் - தேர்தல் அலுவலர்கள் டிஸ்மிஸ்!

author img

By

Published : Feb 9, 2023, 5:06 PM IST

உள்ளாட்சி தேர்தலில் ஆண்கள் நின்ற விவகாரம்- தேர்தல் அலுவலர்கள் பணி நீக்கம்!
உள்ளாட்சி தேர்தலில் ஆண்கள் நின்ற விவகாரம்- தேர்தல் அலுவலர்கள் பணி நீக்கம்!

கரூர் மாவட்டத்தில் 2019 ஊரக உள்ளாட்சி தேர்தலில் குளறுபடியால் 2 அரசு அதிகாரிகளை பணியில் இருந்து நிரந்தர பணி நீக்கம் செய்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களின்போது, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கரூர் மண்டலத்தின் உதவியாளராகவும் பணியாற்றிய சிவக்குமார் என்பவரால் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

சித்தலவாய் கிராம ஊராட்சி 6-வது வார்டு பெண்களுக்காக கடந்த 2019 தேர்தலில் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், வேட்புமனுக்கள் பெறப்பட்டபோது இரண்டு ஆண்கள் வேட்புமனு தாக்கல் செய்து பின்னர், இறுதிப்பட்டியலில் பங்கேற்று தேர்தலில் போட்டியிட்டு கிருஷ்ணமூர்த்தி என்கின்ற ஆண் வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர், சித்தலவாய் ஊராட்சி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆண் வெற்றி பெற்றது குறித்து கடந்த 06.07.2022 அன்று கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபுசங்கரை நேரில் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்தது.

பின்னர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் கடிதத்தின்படி '28.12.2022-ல் 2019 ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தலின்போது, பணியில் கவனக் குறைவாகவும், தன்னிச்சையாகவும், செயல்பட்ட கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலராக பணியாற்றி, தற்போது கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி வரும், வெங்கடாசலத்தையும்;

சித்தலவாய் ஊராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகப் பணியாற்றி தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கரூர் மண்டல உதவியாளராக பணியாற்றி வந்த சிவக்குமார் ஆகிய இரண்டு பேரையும் அரசுப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவருமான பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பேனா நினைவுச் சின்னம் அமைக்க டிடிவி தினகரன் புது யோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.