ETV Bharat / state

குடியரசு தினத்தில் பட்டியலினத்தவர் குடியிருப்பில் சாதி வெறி தாக்குதல் - ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

author img

By

Published : Jan 29, 2022, 3:06 AM IST

சாதி வெறி தாக்குதல்
சாதி வெறி தாக்குதல்

குடியரசு தினத்தில் பட்டியலினத்தவர் குடியிருப்பில் சாதி வெறி தாக்குதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை காவல் எல்லைக்குட்பட்ட அப்பிபாளையம் பகுதியில் கடந்த குடியரசு தினத்தன்று தான்தோன்றிமலை அருகே உள்ள செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த பைனான்சியர் சரவணன் தனது அடியாட்களுடன் அப்பிபாளையம் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கந்து வட்டி கும்பல் வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தலித் விடுதலை இயக்கம் மற்றும் தோழமை அமைப்புகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கருப்பையா மாநில துணைத்தலைவர் தலித் ராஜகோபால், சமநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் புகழேந்தி கண்மணி ராமச்சந்திரன் மாவட்ட செய்தி தொடர்பாளர் கராத்தே இளங்கோ, மாவட்ட ஊடக மையம் அமைப்பாளர் புலி ஈழம் உதயா, புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் பெரியசாமி உள்ளிட்டோர் கூட்டாக கையப்பமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.கருப்பையா, "கரூர் அருகே உள்ள அப்பிபாளையம் பகுதியில் வசித்து வரும் பட்டியிலனத்தவர் கமலநாதன் மனைவி அய்யம்மாள் மேற்கூறிய சரவணன் என்பவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10,000 கடன் தொகைக்கு 15 தினங்களுக்கு ஒரு முறை வட்டி மட்டும் ரூ.1,000 செலுத்தும் வகையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வட்டியாக மட்டும் ரூ.48,000 செலுத்தி வந்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசல் தொகை ரூ.6,000 தொகையை வழங்கியுள்ள நிலையில், வட்டித் தொகையை கேட்டு பொதுமக்கள் முன்னிலையில் அடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் கந்துவட்டி அடாவடி கும்பலை பிடித்து தாந்தோனிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இதனால் ஆத்திரமடைந்து அன்று இரவே 15க்கும் மேற்பட்ட நபர்கள் அப்பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பட்டியிலன மக்கள் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்று கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக வினோத்குமார் என்ற இளைஞர் திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்பிபாளையம் சம்பவம் தொடர்பாக தாந்தோன்றிமலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாந்தோன்றிமலை காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்ய வேண்டும். இதுபோன்று கந்துவட்டி கும்பல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமெனில் காவல்துறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரூர் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கந்து வட்டி கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி புதன்கிழமை ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைத்து கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என தெரிவித்தார். இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தில் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ரம்யா தலைமையிலான காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டார். குடியரசு தினத்தில் பட்டியலினத்தவர் குடியிருப்பில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பொய் பிரச்சாரம் செய்யும் அண்ணாமலை மீது நடவடிக்கை வேண்டும் - மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.