ETV Bharat / state

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வடமாநிலத்தொழிலாளர்கள் அதிகளவில் தேவை - கே.பாலகிருஷ்ணன்

author img

By

Published : Apr 3, 2023, 6:25 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கரூர் சுங்ககேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏப்.2ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து தமிழகத்தில் அரசு வேலையில் அவுட்சோர்சிங் இல்லை என்ற நிலையை உருவாக்கவும்; வட மாநிலத்தவர்கள் குறித்தும் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு

கரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கரூர் சுங்ககேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏப்.2ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். மேலும் அவர் பேசுகையில், ''பாஜக ஆட்சி எல்லை தாண்டி போகிற ஆட்சியாக இருக்கிறது. முழுமையாக நாடாளுமன்றத்தை நடத்த முடியாத ஆட்சியாக பாஜக உள்ளது. அதானி குழுமத்தில் முறைகேடுகள் நடந்ததா, இல்லையா என்பதை விசாரணை குழு நடத்தட்டும்.

ஆனால், அதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பட்ஜெட்டை கூட விவாதிக்காமல் இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் கூட விசாரணைக் குழு அமைக்க முன்வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் அதை விவாதிக்க முடியாத நிலை உள்ளது.
அதானி குழுமத்தின் சொத்து குவிப்பிற்கும், மோடிக்கும் தொடர்பு உள்ளது.

மேலும் இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகும்படியான பல கருத்துகளை முன்வைத்தார். அதானியும், மோடியும் கூட்டு களவாணிகள் தான். உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரணைக்குழு அமைகிறது. ஆனால், ஒன்றிய அரசு விசாரணை குழுவைப் பார்த்து அஞ்சுகிறது. குறிப்பாக, பிரதமர் மோடி அவசரகதியில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. வீட்டைக் காலி செய்ய நோட்டீஸ் வழங்கி இருக்கிறார்கள். 30 நாள் நீதிமன்றம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் ஏன் அவசரமாக ராகுல் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டோல்கேட் கட்டணத்தை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தியதால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக பலர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய அரசு ஒருபுறம் ஜிஎஸ்டி வரியை உயர்த்தி மக்களை வாட்டி வருகிறது, மறுபுறம் பெட்ரோல் டீசல் மீதான வரிகள் காரணமாக, பொருளாதார முடக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் டோல்கேட் கட்டணத்தை உயர்த்தி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

டெக்ஸ்டைல் தொழில் நகரமான கரூரில் குறைவான ஆர்டரே கிடைத்துள்ளதால் தொழில் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. சர்வாதிகாரப் போக்கை நோக்கி, மத்திய ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. பட்ஜெட்டில் நல்ல திட்டங்களை மாநில அரசு கொண்டு வந்துள்ளதையடுத்து, மக்கள் மத்தியில் மட்டுமின்றி, பெருவாரியாக அனைத்துக் கட்சிகளாலும் வரவேற்கப்பட்டுள்ளது. நல்ல திட்டங்களை வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் நிதி அமைச்சர் சொல்லும் கருத்து அவரது சொந்த கருத்தா அல்லது அரசின் கருத்தா என்பது தெரியவில்லை. அந்த மாதிரியான பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். சிறு, குறு தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைச் செயல்படுத்த வேண்டும். இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு திண்டாட்டம் தலைவிரித்து ஆடும் நிலையில் 152 அரசாணையின்படி அவுட் சோர்சிங் முறையை மாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத் திட்டத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

இதனைத்தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். 10 ஆயிரம், 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும், அதனால் அவுட்சோர்சிங் முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு நிர்வாகம் செயல்பட முக்கியக் காரணமாக உள்ள அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர் போராட்டங்கள் வேதனை அளிக்கிறது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் தமிழக அரசு பட்ஜெட்டில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பல்வேறு விளக்கங்களை அளித்து வருகிறார். அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே சமயம் நிதி அமைச்சரின் விளக்கங்கள் அரசின் கருத்தா அல்லது நிதி அமைச்சரின் சொந்தக் கருத்தா என்பதனை அரசு விளக்க வேண்டும்.

குறிப்பாக மாநகராட்சியில் உள்ள அனைத்து அரசு துறையில் உள்ள பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் தனியாருக்கு வழங்கலாம் என்று கூறுகிறார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 7000 பேரை தேர்வு செய்ய லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுவதால் செலவுகள் அதிகரிப்பதாக தமிழக நிதி அமைச்சர் கூறுகிறார்.

தமிழகத்தில் அவுட்சோர்சிங் செய்யும் முறையை எந்த தொழிற்சங்கமும் ஏற்காது. அனைத்து அரசு தொழிற்சங்கங்களும் மின்வாரியத்தில் அவுட்டோர்சிங் முறையை எதிர்த்து போராடி வருகின்றனர். எனவே அரசு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுவே மக்களுடைய கோரிக்கையும் கூட.

பள்ளிக்கல்வித்துறையில் தமிழக மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் திட்டம் நிறுத்தப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அதிமுக திட்டங்கள் ஏதும் நிறுத்தப்படவில்லை, லேப்டாப் உள்ளிட்ட திட்டங்களை மாணவர்களுக்கு பயன்படும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதியில் அறிவித்துள்ளது. அண்மையில் அதுகுறித்து பேரவையில் அறிவிப்பாணைகளை வெளியிட்டது. அதில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்’’ என அறிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பதில் அளித்த அவர், ''எந்த ஒரு நிவாரணத் திட்டமும் அனைவருக்கும் கொடுக்கத் தேவையில்லை.

யாருக்கு தேவை என்பதை உணர்ந்து அவர்களுக்கு கொடுப்பது தான் நல்லது. குறைவான வருமானம் உள்ள பெண்களுக்கு வழங்கப்படுவதை வரவேற்கிறோம்’’ எனத் திட்டவட்டமாகப் பதிலளித்தார்.

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்களின் அதிகரிப்பால் தமிழக தொழிலாளர்களின் நிலை பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, ''வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் தொழில்கள் நடத்த முடியாது.

மேலும் தமிழ்நாட்டின் தொழில் விஸ்தரிப்பால் தொழிலாளர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். வடமாநிலத்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தைச் சார்ந்தவர்களும் வெளி மாநிலங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ், ஈபிஎஸ் லஞ்ச ஊழல் பட்டியல் விரைவில் வெளியீடு - அர்ஜுன் சம்பத் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.