கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன். 12ஆம் வகுப்பு மட்டுமே படித்த இவர் குடும்ப சூழ்நிலையால் கடந்த 13 ஆண்டுகளாக கடையில் வேலை செய்துவந்தார். அதுமட்டுமின்றி ஓட்டுநர் தொழிலை கற்று கடந்த மூன்று வருடங்களாக ஓட்டுநர் பணியும் செய்தார்.
இந்நிலையில் தற்போது அதனை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக கால் டாக்ஸியை தனியார் நிறுவனத்துடன் இணைத்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதில், அவர் காருக்கு வரும் பயணிகளுக்கு மரக்கன்றுகளை அளிக்கிறார். அதுமட்டுமின்றி அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டால் வீட்டிலேயே மரத்தை நட்டுவிட்டும் செல்கிறார்.
மேலும் அந்த மரத்தை முறையாக பாதுகாத்து வளர்த்துவரும் பயணிகள் அதை செல்ஃபி எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பினால் அடுத்த பயணத்தில் 10% தள்ளுபடி செய்து அசத்துகிறார் மணிகண்டன்.
இந்த புதிய முயற்சி பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பயணிகள் மகிழ்ச்சி அடைவதோடு மட்டுமின்றி மணிகண்டன் கையில் எடுத்துள்ள பசுமை புரட்சிக்கான புதிய முயற்சியையும் பாராட்டுகின்றனர்.
இதையும் படிங்க...இந்தியாவுடன் 300 கோடி டாலர் ராணுவ ஒப்பந்தம் - ட்ரம்ப் அறிவிப்பு