ETV Bharat / state

வாகன திருட்டு வழக்கில் நிருபர் கைது.. கன்னியாகுமரியில் நடந்தது என்ன?

author img

By

Published : Jul 8, 2023, 7:11 PM IST

கன்னியாகுமாரியில் தொடர்ந்து திருட்டு போகும் இரு சக்கர வாகனங்கள்
கன்னியாகுமாரியில் தொடர்ந்து திருட்டு போகும் இரு சக்கர வாகனங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதிகளில் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததுடன் 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சமீபத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டு, மோசடி போன்ற பல்வேறு வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மார்த்தாண்டம், திருவட்டார், குலசேகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு போனது குறித்த வழக்குகள் சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தனிப்படை அமைத்து திருடர்களை தேடும் பணியை துரிதபடுத்தனார்.

இந்த நிலையில் மார்த்தாண்டம் அடுத்த திருவட்டார் பகுதியான மாத்தார் கண்ணங்கரை விளையைச் சேர்ந்த சியோலின் கிரம்த் (20) என்ற பட்டதாரியின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட விலை உயர்ந்த இருசக்கர வாகனம் கடந்த 2-ஆம் தேதி அன்று இரவு காணாமல் போனது. இதுகுறித்து சியோலின் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்று கொண்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, விசாரணை மேற்கொண்ட போது செங்கோடி கொட்டறவிளை பகுதியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் மணக்குன்று பகுதியைச் சேர்ந்த விஜின் ஆகியோர் வேறு சிலருடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தை திருடி சென்றதை உறுதி செய்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தபோது, நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த இசக்கியப்பன் என்பவரிடம் இருசக்கர வாகனத்தை விற்பனைக்கு கொடுத்ததாகவும், அவர் ஓட்டிப் பரிசோதனை செய்கிறேன் எனக் கூறி, இருசக்கர வாகனத்துடன் எஸ்கேப் ஆனதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் விசாரணையை மேலும் திவீரப்படுத்தினர். பின்னர் திருவட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் செயல்பட்டு வந்த தனிப்படை போலீசாருக்கு, இருசக்கர வாகனத்தை ஓட்டிப் பார்க்கிறேன் என்று கூறி திருடிச் சென்ற இசக்கியப்பன், வடக்கன்குளம் அடுத்துள்ள தனக்காகுளம் பஸ் நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்திய காவல் துறையினர், ஓட்டிவந்த வாலிபரிடம் விசாரித்த போது அவர்
இருசக்கர வாகனத்துடன் எஸ்கேப் ஆனதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து திருவட்டார் காவல் நிலையம் கொண்டு வந்த போலீசாரின் மேற்படி விசாரனையில், அவர் தனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா, தனக்காகுளத்தில் உள்ள மேலத்தெருவைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தார். என்றும் ஒரு தனியார் பத்திரிகையில் நிருபராகவும் வேலை பார்த்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

மார்த்தாண்டம் பகுதிகளில் சலூன் கடைகளில் வேலை பார்த்து வரும் நண்பர்களை பார்க்க வருவதில் கன்னியாகுமரி மாவட்டம், செங்கோடி கொட்டற விளையை சேர்ந்த ரெஞ்சித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவர் மூலம் திருவட்டார் அருகே உள்ள மணக்குன்றை சேர்ந்த விஜின், வீயன்னூர் வெட்டுக்குழியை சேர்ந்த நிசாந்த் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டு நாங்கள் போனிலும் நேரிலும் அடிக்கடி சந்தித்து பேசுவோம். அப்போது மூன்று பேர்களும் ‘இருசக்கர வாகனங்களை திருடி தந்தால் விற்று தரலாமா?” என்று கேட்டார்கள். நானும் அவர்களிடம் “எனக்கும் பங்கு தந்தால் விற்று தரலாம்’ என்று கூறி அவர்களிடம் போண் நம்பரை கொடுத்திருந்தேன்.

கடந்த 2-ஆம் தேதி காலை சுமார் 09.00 மணியளவில் ரஞ்சித் எனக்கு போன் செய்து இருசக்கர வாகனம் திருடி வைத்திருப்பதாகவும், அதை விற்று ஆளுக்கு ஒரு பங்கு போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினான். அதற்கு நான் சம்மதித்து பகல் 12.00 மணிக்கு நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டான்ட் வர சொன்னேன். நான் பஸ்ஸில் வடசேரி பஸ் ஸ்டான்ட் செல்லும் போது ரஞ்சித்தும், நிசாந்தும், விஜினும் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார்கள். நான் அவர்களை பார்த்து அவர்களிடம் என்ன விலைக்கு விற்க வேண்டும் என்று கேட்டேன். அவர்கள் மூன்று பேரும் 1.15 லட்ச ரூபாய்க்கு விலை போகும் என்று சொன்னார்கள்.

நானும் அவர்களிடம் எவ்வளவு விலை போனாலும் கிடைப்பதில் நான்கில் ஒரு பங்கு தரவேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் சம்மதித்து வண்டியை என்னிடம் தந்தார்கள். நானும் வண்டியை எடுத்து சென்று, எனது வீட்டின் அருகில் மறைத்து வைத்தேன். பின்பு நான் அவர்களிடம் தொடர்பு கொள்ளவில்லை. போலீசார் என்னை பிடித்துக் கொண்டார்கள்” என காவல் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர் போலீசார் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தையும், இசக்கியப்பன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இரண்டு பத்திரிகையின் அடையாள அட்டையையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்ப்பட்டு நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் இன்னும் பிடிபடாமல் தலைமறைவான நிஷாந்த் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை.. தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு ஆயுள் தண்டனை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.