ETV Bharat / state

நாகர்கோவிலில் தொடரும் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்.. காவல் துறையினரின் நடவடிக்கை என்ன?

author img

By

Published : Apr 24, 2023, 6:57 PM IST

தொடரும் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
தொடரும் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையம் அருகே ஹோமியோபதி கிளினிக்கில் கதவை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கம்ப்யூட்டர் மென்பொருட்கள் கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கும்பலை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடரும் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், அண்மைக் காலமாக கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி உள்ளன. சமீபத்தில் சாமியார் வேடம் அணிந்தும், குறி சொல்வதைப் போல வந்தும் வீடுகளில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிச் சென்றுள்ளனர். இந்நிலையில், தற்போது குமரி மாவட்டத்தில் முகமூடி கொள்ளையர்கள் நடமாடத் தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில், நாகர்கோவில் கேப் ரோட்டில் கோட்டார் காவல் நிலையம் அருகே உள்ள ஹோமியோபதி கிளினிக்கில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. மருத்துவர் ஏபி மோசஸ், மருத்துவர் பெர்சி ஆகிய தம்பதியினர் இருவரும் மருத்துவர்கள். இருவரும் இந்த ஹோமியோபதி கிளினிக்கை நடத்தி வருகின்றனர்.

மருந்து வாங்குவதற்காக 50 ஆயிரம் ரூபாய் மேசை மீது வைத்து விட்டு, இரவு கிளினிக்கை பூட்டி விட்டு காலையில் வந்து கிளினிக்கை திறந்து பார்க்கும் போது கதவு உடைக்கப்பட்டு மேசையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கம்ப்யூட்டர் மென்பொருள் சாதனங்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மருத்துவர் ஏபி மோசஸ், கோட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய காவல் துறையினர், முதற்கட்டமாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முகமூடி அணிந்த ஒருவர் நள்ளிரவில் கிளினிக்கில் நுழையும் காட்சிகள் பதிவாகி உள்ளன. முக்கியமான சாலை என்பதால் ஏராளமான சிசிடிவி கேமராக்கள் ஆங்காங்கே இருக்கும்.

முகமூடி அவர் அணிவதற்கு முன்பு உள்ள காட்சிகள் கண்டிப்பாக சிக்கும் என்ற அடிப்படையில் பல சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கோட்டார் காவல் நிலையம் அருகே மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையில் உள்ள கிளினிக்கின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கோட்டார் அடுத்து செட்டிக்குளம் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு பல் மருத்துவ கிளினிக்கில் கதவு உடைத்து கொள்ளை சம்பவத்தில் முகமூடி கொள்ளைகள் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் உள்ள ஆட்சியர் அலுவலகம் செல்லும் பிரதான சாலையில் 24 மணி நேரம் வாகன நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் உள்ள ஒரு பல் கிளினிக்கில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்று 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர் சாதனைகளும் பணங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

அது குறித்து மருத்துவர் திவாகரன் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் கோட்டார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து முகமூடி கொள்ளையர்கள் மருத்துவ கிளினிக்கை பார்த்து குறி வைத்து கொள்ளை அடிப்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவிலில் காவல் துறையினரின் நடவடிக்கையினை விட முகமூடி கொள்ளையர்களின் கை ஓங்கி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இருந்தபோதிலும், காவல் துறையினர் அந்த தொடர் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு; கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.