மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் காஷ்மீரில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி பாரா சைக்கிள் ஓட்டுநர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் சைக்கிள் பேரணி தொடங்கினர். இதனை எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் ஸ்ரீராகேஷ் அஸ்தானா தொடங்கிவைத்தார்.
அங்கிருந்து டெல்லி, மதுரா, நாக்பூர், ஹைதராபாத், தர்மபுரி, மதுரை, நெல்லை வழியாக 3 ஆயிரத்து 842 கி.மீட்டர் தூரத்தை கடந்து நேற்று (டிச.31) மாலை கன்னியாகுமரியில் நிறைவு செய்தனர்.
சைக்கிள் பயணக் குழுவினரை எல்லை பாதுகாப்புப்படை டிஐஜி பேபிஜோசப், முதல் பாரா சைக்கிள் ஓட்டுநர் ஆதித்யா மேத்தா மற்றும் குமரி ஜவான்ஸ் அமைப்பினர் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து விவேகானந்த கேந்திரா ஏக்நாத் அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவனந்தபுரம் எல்லை பாதுகாப்புப்படை டிஐஜி பேபி ஜோசப் தலைமை வகித்தார். பின்னர் சைக்கிள் குழுவின் தலைவர் ஆதித்யா மேத்தா செய்தியாளர்களிடையே கூறுகையில், கரோனா பெருந்தொற்று காலத்திலும் சவாலான சூழ்நிலைகளுக்கிடையே 30 பேருடன் தொடங்கினோம்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2013ஆம் ஆண்டில் நிலப்பரப்பில் சைக்கிள் ஓட்டியபோது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பெரும் சவால்களை எதிர்கொண்ட நிலையில் மக்கள் அளித்த அன்பும், வரவேற்பும் எங்களை உற்சாகபடுத்தியது என்றார்.
இதையும் படிங்க:அறிவியல் & தொழில்நுட்பம் 2020 - ஒரு பார்வை!