ETV Bharat / state

19வது ஆண்டு சுனாமி நினைவு தினம்; கண்ணீர் மல்க கன்னியாகுமரி மக்கள் அஞ்சலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 4:04 PM IST

கண்ணீர் மல்க கன்னியாகுமரி மக்கள் அஞ்சலி
19 ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம்

19th Tsunami Memorial Day at Kanyakumari: 19வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு, அவர்களது உறவினர்கள் மலர் தூவியும், தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டும் அஞ்சலி செலுத்தினர்.

19 ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம்

கன்னியாகுமரி: 19 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் ஆர்ப்பரித்து எழுந்த ஆழிப்பேரலைக்கு பின், இன்று வரை உலகமே டிசம்பர் மாதத்தை கண்டு அச்சப்பட்டு வருகிறது. 2004ஆம் ஆண்டு அதிகாலை வேளையில் இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக்கு அருகே கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுனாமியாக உருவெடுத்தது.

இந்த சுனாமியானது இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளை தாக்கியதில் லட்சக்கணக்காண மக்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்களான குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயினர். இந்நிலையில், இன்று சுனாமியில் நினைவு தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில், தங்கள் உறவினர்களை இழந்த மக்கள், அவர்களது கல்லறைகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முக்கடல் சங்கம கடற்கரையில் அஞ்சலி: குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுனாமியால் உயிரிழந்த சுமார் 400க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு முக்கடல் சங்கம கடற்கரை பகுதியில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று சுனாமி நினைவு தினத்தை ஒட்டி, அப்பகுதியில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கல்லறையில் கண்ணீருடன் அஞ்சலி: இதே போன்று, மணக்குடி கடற்கரை கிராமத்தில் சுனாமியில் உயிரிழந்த 139 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில், உறவினர்கள் ஊர்வலமாகச் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். மேலும் அங்குள்ள தேவாலயத்தில், இன்று சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

கொட்டில்பாட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி: கொட்டில்பாடு பகுதியில் சுனாமியால் உயிரிழந்த 199 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். இந்த இடத்தில் உறவினர்கள் இன்று மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: மறக்குமா நெஞ்சம்..! ஆழிப்பேரலையால் அதிர்ந்த தமிழகம்..! 19வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.