ETV Bharat / state

16 வயது சிறுமி கடத்தல்: எஸ்பி அலுவலகத்தில் தாயார் புகார்!

author img

By

Published : Oct 29, 2020, 6:32 PM IST

கன்னியாகுமரி: அருகுவிளை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற நபர்களை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தாயார் புகார் அளித்துள்ளார்.

16 வயது சிறுமி கடத்தல்: எஸ்பி அலுவலகத்தில் தாயார் புகார்!
Daughter missing case

குமரி மாவட்டம் கிருஷ்ணன் கோயில் அருகுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி(40). இவர் இன்று (அக்.29) குமரி மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணனை நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில்,

"நான் நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் அடுத்துள்ள அருகுவிளை பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 16 வயதில் மகளும் ,14 வயதில் மகனும் உள்ளனர்.

இந்நிலையில் எனது பக்கத்து வீட்டில் நடைபெற்ற கட்டட பணிக்கு கொத்தனார் வேலை செய்ய வந்த லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (26) என்பவர் எனது 16 வயது மகளிடம் நட்பு முறையில் பேசி, அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகிவந்துள்ளார்.

மேலும், எனது மகள் அவரை நம்பி கடந்த அக். 25 ஆம் தேதி பள்ளிவிளையில் உள்ள அவரது தோழி வீட்டுக்குச் செல்வதாக கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு வராததால் நான் அவரது தோழி வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவள் வந்துவிட்டு உடனடியாக வீடு திரும்பியதாக கூறினார்கள்.

இந்நிலையில் லெவிஞ்சிபுரம் பகுதியிலுள்ள வேல்முருகன், பள்ளிவிளை பகுதியிலுள்ள மாரி (50) ஆகிய இருவரும் சேர்ந்து என் மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளதாக தெரிகிறது.

எனது மகளை எங்கோ அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்து விடுவார்கள் என அச்சமாகவுள்ளது. நான் இது சம்பந்தமாக கடந்த அக்.26ஆம் தேதி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அந்த புகாருக்கு காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் ஆய்வாளர் விடுப்பில் உள்ளார் என்றும் தற்போது காவல் துறையினர் தசரா விழாவிற்கு பாதுகாப்பிற்குச் சென்றதால் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் கூறினர். நான் கொடுத்த வழக்கிற்கு போக்சோ வழக்குப்பதிவு செய்யாமல், மாற்றாக சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .

எனவே 16 வயதான எனது மகளை மீட்டு , பாலியல் வன்புணர்வுக்காக கடத்திச் சென்ற இருவரையும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கண்டு இருவரையும் கைது செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.