கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன குளங்கள் தூர் வாரவும், கால்வாய்கள் சீரமைக்கவும் அரசு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தர்மபுரம் ஊராட்சி வெள்ளாரன்விளை பகுதியில் உள்ள பெருங்குளம், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று இந்த குளத்தின் கரையில் ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சார்பில் திடீரென ஒரு கல்வெட்டு அமைக்கப்பட்டது. அதில் பெருங்குளம் கரை மேம்பாடு செய்யப்பட்டதாகவும், 30/05/2019 முதல் 24/07/2019 வரை தினக்கூலி 200 ரூபாய் சம்பளத்தில், 2,527 பேர் பணி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஏற்கனவே பொதுமக்கள் சார்பில், ‘பெருங்குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை முறையாகத் தூர் வார வேண்டும். குளத்திற்குத் தண்ணீர் வந்து செல்லும் கால்வாயைக் காணவில்லை, கண்டுபிடித்துத் தாருங்கள்’ என அலுவலர்களுக்கு மனு கொடுத்திருக்கும் நிலையில், பணிகளே செய்யாமல் எட்டரை லட்சம் ரூபாய் செலவு செய்ததாக வைத்தது ஏன்? பணி எங்கே நடந்தது? என ஒன்றிய ஆணையாளரிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கால்வாய் சுத்தம் செய்ததாகக் கூறி அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அலுவலர்களும் அந்த கல்வெட்டை உடனடியாக அங்கிருந்து அகற்றினர். பணிகளே செய்யாமல், அந்த வேலைக்கான நிதியை அலுவலர்களே கையாடல் செய்துள்ளதாகவும், ஊழல் செய்த அரசுத் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.