ETV Bharat / state

குமரியில் மசூதி, தேவாலயங்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 1:41 PM IST

Bomb Threat Letter
வெடிகுண்டு மிரட்டல்

Bomb Threat Letter: கன்னியாகுமரியில் உள்ள தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பள்ளி வாசல்கள் இவைகளை குறிவைத்து, கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு குளச்சல் பகுதியில் உள்ள பள்ளி முக்கு சந்திப்பில் ஜும்மா பள்ளிவாசலுக்கு தபால் கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தை பார்த்தபோது, பள்ளிவாசல் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது அந்த கடிதத்தில், "உங்கள் பள்ளிவாசல் புறம்போக்கு மற்றும் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளது. இதனை பட்டா நிலத்திற்கு மாற்ற வேண்டும். இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்.

அனைத்து அரசியல் பிரமுகர்களிடமும் எனக்கு செல்வாக்கு இருக்கிறது. மேலும் ரூ.20 கோடி எனக்கு தர வேண்டும். இல்லையேல் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இப்போது நாங்கள் 8 பள்ளிவாசலை ஒரே நாளில், ஒரே நேரத்தில் மண்ணோடு மண்ணாக்க குறி வைத்துள்ளோம்" என்று அந்த கடிதத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மிரட்டல் கடிதம் அகஸ்தீஸ்வரம் புவியூர் அருண், புரோட்டா கடை உரிமையாளர் மற்றும் கோயில் அறங்காவல் குழு உறுப்பினர் ஹரிகிருஷ்ணன் என்ற பெயருடன் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக, குளச்சல் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்தது. அதன் பின்னர் விசாரணையில், அந்த தகவல் புரளி என்பது தெரிய வந்துள்ளது.

இதே போல், கன்னியாகுமரி மற்றும் சின்னமுட்டம் கிறிஸ்தவ ஆலயத்திற்கும், தக்கலை திருவிதாங்கோடு பகுதியில் உள்ள முஸ்லிம் ஜமாத்துக்குச் சொந்தமான மசூதிக்கும் மிரட்டல் கடிதம் வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல தென் தாமரை குளம், கொட்டாரம், அஞ்சு கூட்டு தேரிவிளை போன்ற ஊர்களில் உள்ள தேவாலயங்களுக்கும், நாகர்கோவில் மணிமேடை பகுதியில் உள்ள மசூதி, மேலும் சில மசூதிகளுக்கும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் மிரட்டல் கடிதம் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

வடசேரி கோட்டார் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, வடசேரி மணிமேடை பகுதிக்கு வந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக, மசூதி நிர்வாகிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை குமரி மாவட்டம் முழுவதும் சுமார் 10க்கும் மேற்பட்ட வழிபாடுத் தலங்களுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்த மிரட்டல் கடிதங்கள் தொடர்பாக குளச்சல், கன்னியாகுமரி, தக்கலை, நாகர்கோவில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த கடிதங்கள் அனைத்தும் தென் தாமரை குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புவியூர் கிராமத்தில் உள்ள நபர்களின் பெயரில் அனுப்பப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அந்த கடிதங்களை அடிப்படையாக வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும், அந்த மிரட்டல் கடிதங்கள் மனோகரன், முருகன், செந்தில், பாபு, கிருஷ்ணன் என்ற பல பெயர்களில் வந்துள்ளது. ஆகையால், அந்த பெயர்களில் புவியூர் பகுதியில் உள்ள நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த கடிதங்கள் நாகர்கோவில், கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் தபால் நிலையங்களில் இருந்து அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக கியூ பிரிவு போலீசாரும், உளவுப் பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது இந்த மிரட்டல் கடிதம் குறித்த புகாரின் அடிப்படையில், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், வடசேரி காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், குளச்சல், கோட்டார், தென்தாமரைக் குளம் மற்றும் அஞ்சு கிராமம் காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், இவ்வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், மிரட்டல் கடிதம் அனுப்பியவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில், மிரட்டல் கடிதங்கள் வந்தது அனைத்தும் தென்தாமரைக்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புவியூர் பகுதியில் உள்ள நபர்கள் பெயரில் அனுப்பப்பட்டு இருந்ததால், அந்த நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கு விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக புவியூரைச் சேர்ந்த 35 வயதான கதிரேஷ் என்பவரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து குற்றத்தை ஒப்புக் கொண்ட கதிரேஷனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், கைது செய்யப்பட்ட கதிரேஷ் எம்எஸ்சி பட்டதாரி எனவும், இவர் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், புவியூரில் உள்ள கோயில் ஒன்றில் விநாயகர் சிலை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சிலைகள் பிரதிஷ்டை செய்யும் நிலையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிலை வைக்க, ஒரு தரப்பினர் சிலை வைப்பதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தற்போது சிலை வைப்பதை தடுத்து நிறுத்திய நபர்களை பழிவாங்க முடிவு செய்த கதிரேஷ், இது தொடர்பாக காவல் நிலையங்களுக்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே, மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பி இருக்கிறார். குறிப்பாக, அந்த கடிதங்களை சிலை வைப்பதை தடுத்த நபர்கள் பெயரில் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட கதிரேஷிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தூர்தர்ஷன் நேரலையில் உயிரிழப்பு! கேரள வேளாண் பல்கலைக்கழக இயக்குநர் அதிர்ச்சி மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.