ETV Bharat / state

கனல் கண்ணன் கைது; பேருந்து நிறுத்தப்பட்டதால் நாகர்கோவிலில் பதற்றம்!

author img

By

Published : Jul 11, 2023, 6:50 AM IST

movie stunt master Kanal Kannan arrest in Nagercoil the buses were operated under police protection
movie stunt master Kanal Kannan arrest in Nagercoil the buses were operated under police protection

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சி நிர்வாகிகள் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ஒன்று கூடியதால், போலீஸ் பாதுகாப்புடன் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை அடுத்து பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது

கன்னியாகுமரி: இந்து முன்னணி நிர்வாகியும், திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சி நிர்வாகிகள் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ஒன்று கூடியதால், அரசு பேருந்துகளின் இயக்கம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை செல்லும் வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டன.

திரைப்பட சண்டைப் பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநிலச் செயலாளருமான கனல் கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்து இருந்தார். அதில் கிறிஸ்தவ மத போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோ அதன் பின்னணியில் தமிழ் திரைப்படப் பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும், அதில் வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான் என்றும், மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள் என்ற வார்த்தையுடன், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இளம்பெண்ணுடன் நடனமாடும் வீடியோவினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதனைப் பார்த்த கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த ஆஸ்டின் பெனட் (54) என்பவர் நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் விதத்திலும் அவதூறாக வீடியோ வெளியிட்டுள்ளது என குறிப்பிட்டு புகார் அளித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் 295 (மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது) 505/2 (பிரிவினையை ஏற்படுத்துவது) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 8 மணி நேர விசாரணைக்குப் பின்னர் நேற்று (ஜூலை 10) அவரை கைது செய்தனர்.

இவ்வாறு கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியினர் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ஒன்று கூடினர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரம், அரசு பேருந்துகள் இயக்கம் ஒரு மணி நேரம் ரத்து செய்யபட்டது. பின்னர் நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை செல்லும் வெளியூர் பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இயக்கப்பட்டது. பின்னர் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்து முன்னணி நிர்வாகியும், திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன் திடீரென போலீசாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் நாகர்கோவிலில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: தியாகிகள் புகைப்படம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - சிசிடிவி காட்சி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.