கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா ஜெனட் (42). மருத்துவரான இவர் கன்னியாகுமரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
இவர் முன்னதாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியை முடித்துவிட்டு , இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரது வீடு அமைந்துள்ள தெருவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ஆசாரிப்பள்ளம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனுஷ்கோடி சென்ற பேருந்தை நடத்துனர் இயக்கியதால் விபத்து