கன்னியாகுமரி மாவட்டம், கல்லுவிளை அருகே வெள்ளிகோடு பகுதியைச் சேர்ந்தவர் லதா(40). இவர் தனியாக சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், லதா அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தங்க நகையைப் பறித்துச் சென்ற நபர்கள் குறித்து, மோப்ப நாய் உதவியுடன், தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கடையிலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கேரளா பதிவு எண் கொண்டது என தெரியவந்தது. எனவே, கொள்ளையர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையைத் திருப்பியுள்ளனர்.
பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.