ETV Bharat / state

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.56 லட்சம் மோசடி- பெங்களூரு தம்பதி சிக்கியது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 3:31 PM IST

Bengaluru couple Arrested for Jobs Scam: ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.56 லட்சம் மோசடியில் ஈடுபட்ட, பெங்களூரை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை, குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Arrested Bangalore couple for Jobs Scam
ரயில்வேயில் வேலை எனக் கூறி ரூ.56 லட்சம் மோசடி

கன்னியாகுமரி: புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் கோணத்து விளை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீதா(29). பிரவீதா உள்ளிட்ட சிலரிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.56 லட்சம் வரை பெங்களூரை சேர்ந்த தம்பதியினர் ஏமாற்றிவிட்டதாகவும், அந்த பணத்தை மீட்டுத் தருமாறும் நாகர்கோவில் 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "ஐரேனிபுரத்தைச் சேர்ந்தவர் அபிஷா(33). இவருடன் கடந்த சில நாட்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர், பெங்களூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த மத்திய அரசில் பணி புரியும், ஊழியர் ஜோயல் தேவா(37) என்பவரை திருமணம் செய்து கொண்டு, தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அபிஷாவும், அவருடைய கணவர் ஜோயல் தேவாவும் சேர்ந்து, தங்களுக்கு ரயில்வே துறையில் முக்கிய அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ரயில்வே துறையில் வேலை வாங்கி தர முடியும் என்றும் என்னிடம் கூறினார்கள்.

ஆனால் வேலை வாங்கித் தர வேண்டும் என்றால், பணம் தர வேண்டும் என்றும் கூறினார்கள். ஆகையால் அவர்கள் கூறியதை நம்பி நான் முதலில் ரூ.20 லட்சம் கொடுத்தேன். இதே போல கிள்ளியூர் பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த பிறைஜா என்பவரிடம் ரூ.10 லட்சமும், முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் என 4 பேரிடமும் ரயில்வே வேலை வாங்கி தருவதாகக் கூறி மொத்தம் ரூ.56 லட்சம் வாங்கினார்கள்.

ஆனால் அவர்கள் கூறியது போல, ரயில்வே வேலை வாங்கித் தரவில்லை. எனவே நாங்கள் அந்த பணத்தை திருப்பித் தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடித்தனர். தற்போது வேலை வாங்கி தருவதாக பணத்தை வாங்கி மோசடி செய்து விட்டனர். மேலும் இந்த மோசடியில் தேனியை சேர்ந்த முரளி(24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கும் தொடர்பு உள்ளது" என குறிப்பிட்டுள்ளார். ஆகையால், இந்த மோசடி தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார்.

அதனையடுத்து இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த மோசடி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் விசாரணை மேற்கொண்டு வந்தார்.

அந்த விசாரணையில் ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.56 லட்சம் வாங்கிக் கொண்டு, வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியது உறுதிபடுத்தப்பட்டது. பின்னர் ஜோயல் தேவா, அவருடைய மனைவி அபிஷா, முரளி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

அதன் பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் பெங்களூருவில் இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார், பெங்களூர் சென்று ஜோயல் தேவா, அபிஷா தம்பதியை கைது செய்தனர். பின்னர் அவர்களை குமரிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Seeman : நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கில் சீமான் ஆஜராகாதது ஏன்? - சீமான் தரப்பு விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.