ETV Bharat / state

Seeman : நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கில் சீமான் ஆஜராகாதது ஏன்? - சீமான் தரப்பு விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 12:10 PM IST

Seaman did not appear in Vijayalakshmi case: நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கின் முழு விவரம் தெரிந்தால் மட்டுமே ஆஜராவேன் என சீமான் தரப்பில் காவல் நிலையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Seaman did not appear in Vijayalakshmi case
விஜயலட்சுமி கொடுத்த வழக்கின் முழு விவரம் தெரிந்தால் மட்டுமே ஆஜராகுவேன் என சீமான் விளக்கம்

சென்னை: கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கின் முழு விவரம் தெரிந்தால் மட்டுமே ஆஜராவதாக சீமான் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் புகார்கள் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வேண்டுகோள் விடுத்து வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

அந்த புகாரில், பாலியல் வன்கொடுமை, பெண் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக கூறி, இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜயலட்சுமி கடிதம் எழுதிக் கொடுத்த காரணத்தால், போலீசார் மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் தன்னை நம்ப வைத்து மீண்டும் ஏமாற்றி விட்டார் எனவும், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட பழைய வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறி புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சென்னை கோயம்பேடு துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் விஜயலட்சுமி தரப்பில் இருந்து விவரங்கள் மற்றும் ஆதாரங்களை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு விஜயலட்சுமியை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வாக்குமூலங்களையும் போலீசார் பெற்றனர்.

அப்போது நடிகை விஜயலட்சுமி, தான் 7 முறை சீமானின் கட்டாயத்தால் கருக்கலைப்பு செய்ததாக, அந்த புகாரில் தெரிவித்து இருந்தார். மேலும் சீமானால், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ள அந்த புகாரின் அடிப்படையில், மருத்துவ ரீதியிலான ஆதாரங்களை உறுதிப்படுத்த முடியுமா? என்ற கோணத்தில் நடிகை விஜயலட்சுமியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போலீசார் பரிசோதனை மேற்கொண்டனர்.

அதன் அடுத்த கட்டமாக விஜயலட்சுமியிடம் மருத்துவ அறிக்கை வந்த பின்பு ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளதாகக் கூறி அவருக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கடந்த சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அன்றைய‌ தேதியில் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக இன்று (செப்.12) காலை சீமான் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்றும் சீமானுக்கு பதிலாக நாம் தமிழர் மாநில வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில், செயலாளர் சங்கர் தலைமையான 6 வழக்கறிஞர்கள் வந்து, சீமான் ஆஜராகவில்லை என வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விளக்கம் அளித்தனர். மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கின் முழு விவரம் தெரிந்தால் மட்டுமே சீமான் ஆஜராவார் என்றும் அவர் தரப்பில் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.