ETV Bharat / state

சுனாமி நினைவு தினம்: குமரி கடற்கரையில் கண்ணீர் மல்க மீனவர்கள் அஞ்சலி!

author img

By

Published : Dec 26, 2022, 12:04 PM IST

கன்னியாகுமரியில் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்திய மீனவர்கள்
கன்னியாகுமரியில் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்திய மீனவர்கள்

சுனாமி பேரலையின் 18ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மீனவர்கள் கடற்கரையில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரியில் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்திய மீனவர்கள்

கன்னியாகுமரி: 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி நிகழ்ந்த சுனாமி எனும் ஆழிப்பேரலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்களான குளச்சல் , கொட்டில்பாடு , மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயினர்.

குளச்சல் பகுதியில் பலியான சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். இதே போன்று மணக்குடி மீனவ கிராமத்தில் 118 -க்கும் மேற்படோரும், கொட்டில்பாடு பகுதியில் 140 மேற்பட்டோரும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று சுனாமியால் உயிரிழந்த 18-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

மணக்குடி மீனவ கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நினைவு திருப்பலி நிறைவேற்றபட்டது. திருப்பலியில் ஆழி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட, ஏராளமானோர் கலந்துக் கொண்டு இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், இது போன்ற துயர சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டியும் இறைவனை பிரார்த்தனை செய்தனர்.

தொடர்ந்து தேவாலயத்தில் இருந்து மௌன ஊர்வலமாக சுனாமியால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்த உறவினர்கள், அங்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். சுனாமி பேரழிவால் தங்கள் உறவினர்களை பறிகொடுத்தோர் பலர், கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது. சுனாமி நினைவு தினமான இன்று குமரி கடற்கரை கிராமங்களில் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.

"சுனாமியில் உயிரிழந்த மீனவர்கள் பலரது குடும்பங்களுக்கும் அரசு சார்பில் நிவாரணம் கிடைத்தாலும், 18 ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் சில குடும்பங்களுக்கு நிவாரண தொகை கிடைக்காத சூழல் இருப்பதாகவும், அரசு எச்சரிக்கை நடவடிக்கையாக மீனவ கிராமங்களில் அலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என மணக்குடி பங்குத்தந்தை அந்தோணியப்பன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: Tsunami anniversary: கடலில் பால் ஊற்றி தூத்துக்குடி மீனவர்கள் அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.