ETV Bharat / state

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சியில் சாமி தரிசனம்!

author img

By

Published : Apr 2, 2023, 6:06 PM IST

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகை
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகை

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள திருமுக்கூடல் கிராமத்தில் பழமையான அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோயில் உள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சியில் சாமி தரிசனம்!

காஞ்சிபுரம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்தக் கோயில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பல்லவர்கள் காலத்தில் இங்கு ஆதுலர் சாலை என்றழைக்கப்பட்ட மருத்துவமனையும், வேதபாட சாலையும் செயல்பட்டு வந்தன. இதுகுறித்து இக்கோயிலில் கல்வெட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சரித்திரப் புகழ் பெற்ற இந்தக் கோயிலுக்கு இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, கால்நடை மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல்‌.முருகன், மேலும் பாஜக மகளிரணி தேசியத்தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் வருகை தந்தனர். சுவாமி தரிசனம் செய்ய வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்த பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோயில் வளாகத்தினுலிருந்த கல்வெட்டுக்களைப் பார்வையிட்டு, அதனைப்பற்றிய விவரங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார்.

இதனைத்தொடர்ந்து அங்கு வந்திருந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடம் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''நம்முடைய சரித்திரத்தை சொல்லக்கூடிய சிறிய விஷயம் ஏதாவது ஒன்று ஒரு ஊரில் உள்ளதென்றால் அதைப் பார்க்கக்கூடிய ஆர்வம் நம்மிடம் இருக்க வேண்டும். இன்றைக்கு இந்தப் பகுதிக்கு வந்திருக்கும் நீங்கள் எல்லோரும், வெளியில் இருந்து, வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களாகக் கூட இருக்கலாம். கோயிலுக்குச்செல்வது என்பது தெய்வத்தை வழிபடுவதற்காக மட்டுமில்லாமல்,
தரிசனம் முடித்து, கூடுதலாக பத்து நிமிடம் எடுத்துக்கொண்டு அந்தக் கோயில் வெளிப் பிரகாரத்தில் இருக்கக்கூடிய கல்வெட்டுக்களில் உள்ள விஷயங்களை பற்றி புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அந்த எழுத்துகள் புரியாவிட்டாலும் தனிப்பட்ட ஆர்வமும் பயிற்சியும் இருந்தால் படித்துப் புரிந்து கொள்ள முடியும். நாம் அனைவரும் நன்றாகப் படித்து, பட்டதாரியாகி, நல்ல வேலையில் அமர்வதோடு மட்டுமல்லாமல், நமது நாட்டைப் பற்றி தெரிந்து கொள்ளவும் வேண்டும்.

நமது நாட்டைப் பற்றி பேச வேண்டும். நமது நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு இடமும் ஆயிரம் கதைகள் சொல்லக்கூடிய இடங்கள். அதிலிருந்து ஏதாவது ஒரு கதையைக் கூட நீங்கள் உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் அவற்றைப் பற்றி பதிவு செய்யுங்கள். அப்போதுதான் நம்முடைய நாட்டில் சுற்றுலாத்துறை இன்னும் வளரும்.

உங்களை நான் வலியுறுத்துவது என்னவென்றால் இன்றைக்கு வீட்டிற்குச்சென்று பெற்றோர்களிடம் சொல்லுங்கள். கோயிலுக்கு உள்ளே சென்று வழிபடுவதோடு மட்டும் நில்லாமல் அக்கோயில்களின் வெளியில் இருக்கக்கூடிய விஷயங்களையும் பார்த்தால், நம்முடைய நாட்டை எத்தனை விதமான அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பது புரியும். தினந்தோறும் நோட்டுப் புத்தகத்தில் அல்லது சின்ன டைரியில் குறிப்புகள் எழுதிப் பழகுங்கள்.

அன்றாடம் நீங்கள் செய்தவை, கேள்விப்பட்டவை, பார்த்தவை என அனைத்தையும் பதிவு செய்யுங்கள். ஆறு மாதங்கள் கழித்து அதை நீங்கள் புரட்டிப் பார்த்தால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும், நான் இவ்வளவு எழுதி இருக்கிறேனா, இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து கொண்டேனா என்று.
இதைத்தான் அரசர்கள் அன்றைக்கு கல்வெட்டில் செய்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல பழக்கம். படுப்பதற்கு முன் ஒரு ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி எழுதும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்’’ என்று சுற்றுலா துறையின் மேன்மையை உயர்த்தி கோயிலிலிருந்த மாணவ மாணவியர்களுக்கு அதன் வரலாறு குறித்த மகத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து போக்குவரத்து மற்றும் பேருந்து வசதிகள் குறித்து மாணவ மாணவிகள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி அவதூறு வழக்கு - தீர்ப்பை எதிர்த்து ராகுல் நாளை மேல்முறையீடு?!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.