ஆயிரம் ஆண்டு பழமையான சப்தமாதர்கள் சிற்ப தொகுப்பு கண்டெடுப்பு

author img

By

Published : Aug 4, 2021, 5:58 AM IST

ஆயிரம் ஆண்டு பழமையான சப்தமாதர்கள் சிற்பத் தொகுப்பு கண்டெடுப்பு

உத்திரமேரூர் அருகே சோழர் காலத்தைச் சேர்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சப்தமாதர்கள் சிற்ப தொகுப்பை வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம்: உத்தரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில் சோழர் காலத்தை சேர்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுவர் அன்னையர் எனப்படும் சப்த மாதர்கள் சிற்ப தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் தலைமையில் அனுமந்தண்டலம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டபொழுது அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த சிற்பத் தொகுப்பை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து கொற்றவைஆதன் கூறுகையில், "நாங்கள் கண்டெடுத்த இந்த சிற்ப தொகுப்பானது ஒரே பலகை கல்லில் 1 1/2 அடி உயரம் 4 1/2 அடி நீளம் கொண்ட எழுவர் அன்னை எனப்படும் சப்த மாதர்கள் தொகுப்பு ஆகும்.

ஆயிரம் ஆண்டு பழமையான சப்தமாதர்கள் சிற்பத் தொகுப்பு கண்டெடுப்பு

எழுவர் அன்னையர்

இந்த சிற்பம் அழகிய வேலைப்பாடுகளுடன் சப்த மாதர்கள் அமர்ந்த நிலையில் இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டபடி காணப்படுகிறார்கள். முதலில் பிராமியும், இரண்டாவதாக மகேஸ்வரியும், மூன்றாவதாக கௌமாரியும், நான்காவதாக வைஷ்ணவியும், ஐந்தாவதாக வராகியும், ஆறாவதாக இந்திராணியும், ஏழாவதாக சாமுண்டியும் அவரவர்களுக்குரிய ஆயுதங்கள், சின்னங்கள் மற்றும் அணிகலன்களுடன் காட்சியளிக்கிறார்கள்.

பொதுவாக இவர்களுடன் கணபதி மற்றும் வீரபத்திரர் இருப்பார்கள். ஆனால் இங்கு அவர்கள் காணப்படவில்லை. இவ்வூர் மக்கள் இதை அலையாத்தி அம்மன் என்கிறார்கள், ஆனால் இது எழுவர் அன்னையர் எனப்படும் சப்தமாதர்கள் ஆகும். இது தாய்த்தெய்வ வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கமாகும்.

புராணங்களில் எழுவர் அன்னையர் வழிபாடு

பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் வரை சிறந்த வழிபாடாக இவ் எழுவர் கன்னியர் வழிபாடு தொடர்கிறது. தமிழ்நாட்டின் மிகப் பழமையான முக்கிய கோயில்களில் ஒன்றான காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் இந்த சிற்பங்கள் இன்றைக்கும் காட்சியளிக்கின்றன.

ஆயிரம் ஆண்டு பழமையான சப்தமாதர்கள் சிற்பத் தொகுப்பு
ஆயிரம் ஆண்டு பழமையான சப்தமாதர்கள் சிற்பத் தொகுப்பு

சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, திருமந்திரம் முதலிய நூல்களில் எழுவர் அன்னையர் வழிபாடு குறித்த குறிப்புகள் காண கிடைக்கின்றன. இன்றைக்கும் கிராமங்களில் ஊர் திருவிழாக்களில் முதல் படையல் மற்றும் பலி இவர்களுக்கு கொடுத்த பிறகே மற்றவை நடைபெறுகிறது.

வரலாறு

கி.பி ஆறாம் நூற்றாண்டில் பிருகத்சம்கிதை என்கிற நூலில் எழுவர் அன்னையர் தோற்றம் குறித்த குறிப்புகள் கிடைக்கின்றது. சிவபெருமானுக்கும் அந்தகாசுரனுக்கும் போர் நடக்கிறது. இதில் அந்தகாசுரன் உடலில் இருந்து சொட்டும் ஒவ்வொரு துளி ரத்தமும் ஒவ்வொரு அந்தகாசூரர்களாக மாறி பெரும் போர் புரிந்தார்கள். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர சிவபெருமான் தன் நாக்கு தீச்சுவாலையிலிருந்து மகேஸ்வரி எனும் பெண் சக்தியை உருவாக்கினார்.

அப்படி உருவாக்கிய எழுவரும் அசுரர்களின் ரத்தத்தை குடித்து இந்த பெரும் போரை முடிவுக்குக் கொண்டுவருகிறார்கள். இப்படித்தான் எழுவர் அன்னையர்கள் உருவானார்கள்.

நாங்கள் கண்டெடுத்த இந்த சிற்ப தொகுப்பானது சோழர் காலத்தை சேர்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு பறைசாற்றும் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்த பக்தி வரலாற்று கலை பொக்கிஷங்களை பாதுகாப்பது நம் கடமையாகும் " என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொற்கை அகழாய்வு - 9 அடுக்கு சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.