ETV Bharat / state

காஞ்சிபுரம் பண மோசடி - போக்குவரத்துக் காவலர் உள்ளிட்ட மூவர் சஸ்பெண்ட்!

author img

By

Published : Apr 4, 2023, 6:35 PM IST

Three
காவல்

காஞ்சிபுரத்தில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, காவல் துறையினர் உள்பட பலரிடம் பண மோசடி செய்த போக்குவரத்துக் காவலர் உள்ளிட்ட மூன்று அரசு அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் பகுதியைச்சேர்ந்தவர், ஆரோக்கிய அருண். இவர் போக்குவரத்துக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மூத்த சகோதரர் சகாய பாரத், மாமல்லபுரம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய இளைய சகோதரர் இருதயராஜ், முதலில் காவல்துறையில் பணியில் இருந்தார் - தற்போது மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் குடும்பமாக சேர்ந்து பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தாங்கள் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வருவதாகவும், தங்களிடம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி, பல கோடி ரூபாய் வசூலித்துள்ளனர். பொதுமக்கள் மட்டுமல்லாமல் உடன் பணிபுரியும் காவலர்களிடமும் பணத்தை வசூலித்துள்ளனர். இவர்களது குடும்பத்தினர் காவல்துறையில் இருப்பதால், அனைவரும் நம்பி பணம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்த ஆரோக்கிய அருண் மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த ஆண்டு முதலே மாதம்தோறும் தர வேண்டிய வட்டித் தொகையை தராமல் இழுத்தடித்துள்ளனர். இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரோக்கிய அருண் மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், போக்குவரத்துக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆரோக்கிய அருண், மாமல்லபுரம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அவருடைய மூத்த சகோதரர் சகாய பாரத் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், கல்வித்துறையில் பணிபுரிந்து வந்த அவர்களது இளைய சகோதரர் இருதயராஜும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: வேலியே பயிரை மேய்ந்த கதை; பண மோசடி செய்த காவலர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.