காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த சில தினங்களாகப் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டிலிருந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி சுமார் 1 லட்சத்து 4 ஆயிரம் கனஅடி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடும் வெள்ளப்பெருக்கு
பாலாற்றில் சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி நீரானது ஆர்ப்பரித்துக்கொண்டு பாய்ந்து வருகிறது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் சுமார் 25 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு செய்யாற்றிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்விரு ஆறுகளில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கினால் ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார்.
திருமுக்கூடலில் வெள்ளம்
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் அருகே பாலாறு, செய்யாறு, வேகவதி என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமான திருமுக்கூடலில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரு கரையோரங்கள் முழுவதும் வெள்ளமானது ஆர்ப்பரித்துக் கொண்டு செல்கிறது.
இதனையடுத்து திருமுக்கூடல் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பன்னீர் செல்வம், வாலாஜாபாத் தாசில்தார் லோகநாதனுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கூடுதலாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
திருமுக்கூடலில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கினால் அப்பகுதியே கடல் போல் காட்சியளிக்கின்றது.
இதையும் படிங்க: Depression over Bay of Bengal: 5 நாள்களுக்கு கனமழை தொடரும்!