இளம்பெண் கூட்டு பாலியல் - காதலன் உள்பட 4 பேர் கைது

author img

By

Published : Sep 10, 2021, 8:59 AM IST

இளம்பெண் கூட்டு பாலியல்

காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி தனது காரில் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காதலன் உள்பட நான்கு பேரை கைதுசெய்த காவல் துறையினர், தலைமறைவாகவுள்ள ஒருவரைத் தேடிவருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில் தனியார் கடை ஒன்றில் வேலை செய்துவருகிறார். அந்தக் கடைக்கு வாடிக்கையாக வந்துசெல்லும் வணிகர் வீதியைச் சேர்ந்த குணசீலன் என்பவர், அந்தப் பெண்ணுக்கு காதல் வலை வீசினார்.

மேலும், அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பெண்ணிடம் போன் நம்பர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் நண்பராக இணைந்து பழகிவந்தார்.

காதலனை நம்பி காரில் சென்ற இளம்பெண்

இந்தச் சூழ்நிலையில் குணசீலன் என்பவர் அந்தப் பெண்ணை காதலிப்பதுபோல், பொய்யாக நடித்துப் பேசி எங்களுடைய பூர்விக சொத்துகள் உள்ள மேல்கதீர்பூர் கிராமத்துக்குச் சென்று வருவோம் எனக் கட்டாயப்படுத்தி, தன்னுடைய மாருதி ஷிப்ட் காரில் அழைத்துச் சென்றார்.

அவ்வாறு செல்லும் வழியிலேயே அந்த இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து குடிக்கவைத்துள்ளார். அந்தப் பெண்ணுக்குப் போதை ஏறியவுடன் தன்னுடைய நண்பர்களான, மேட்டு காலனி சிறுவள்ளூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெபநேசன் (29), ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் குணசேகரன் (24), காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் வீதியைச் சேர்ந்த அஜித் (23), காமராஜ் ஆகியோரை அழைத்து மேல்கதிர்பூரிலுள்ள தன்னுடைய பம்பு செட்டுக்கு வருமாறு கூறினார்.

கூட்டு பாலியல் வன்புணர்வு

இதையடுத்து நான்கு நண்பர்களும் அந்த இடத்துக்கு வந்தவுடன், அந்த இளம்பெண்ணை காரில் வைத்து ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் வலி தாங்க முடியாமல் காரின் கண்ணாடியை ஓங்கி அடித்தார்.

அப்பகுதியில் விவசாய வேலை செய்துவிட்டு, அந்த வழியே சென்ற பெண்கள் காரில் இருந்து சத்தம் வருவதைக் கண்டு அருகே சென்று பார்த்துள்ளனர். காரின் உள்ளே நிர்வாண கோலத்தில் அந்த இளம்பெண்ணும், மற்ற இரண்டு ஆண்களும் இருந்தனர்.

தப்பியோடிய இளைஞர்கள்

பின்னர் பம்பு செட் அருகே போதையில் இருந்து, குணசீலன் பொதுமக்கள் கூட்டம் கூடியவுடன் சாவியை தூக்கி ஜெபநேசனிடம் வீசினார். அதைப் பெற்றுக்கொண்ட ஜெபநேசன் அந்தப் பெண்ணுடன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டி தப்பினார். மற்ற நண்பர்களும் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றனர்.

பின்னர் அந்த இளம்பெண் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் தன்னை ஐந்து பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகப் புகார் அளித்தார்.

குற்றவாளிகள் சிறையில் அடைப்பு

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவந்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் எம். சுதாகர் அந்தப் பெண்ணிடம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள்

அதன்பேரில் வழக்கறிஞர்கள் ஜெபநேசன், குணசேகரன், அஜித் தொழிலதிபர் குணசீலன் ஆகிய நான்கு பேரை கைதுசெய்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள்

பின்னர் அவர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தலைமறைவாகவுள்ள காமராஜர் என்பவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: மைசூரு கூட்டுப் பாலியல் வழக்கு: தமிழ்நாட்டைச் சேர்ந்த 6ஆவது குற்றவாளி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.