ETV Bharat / state

Viral Video - ஆருத்ரா நிதி நிறுவன ஏஜெண்ட் அடாவடி.. முதியோர் தம்பதியின் வீட்டை விற்று மோசடி!

author img

By

Published : May 24, 2023, 5:14 PM IST

Etv Bharat
Etv Bharat

முதியோர் தம்பதியின் வீட்டை விற்று ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்த முகவர் நாகராஜ் என்பவர், தம்பதியரின் வீட்டிற்குள் நுழைந்து அராஜகம் செய்த வீடியோ வெளியாகி காண்போரை அதிரவைத்துள்ளது.

முதிய தம்பதியின் வீட்டை பூட்டிய ஆருத்ரா நிதி நிறுவன முகவர்

காஞ்சிபுரம்: ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 மோசடி நிதி நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் 2.91 லட்சம் ரூபாய் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடி செய்துள்ளது. இதில், சென்னையை மையமாகக் கொண்டுள்ள ஆருத்ரா நிதி நிறுவனம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை ஏமாற்றி உள்ளது.

அதிக வட்டி தருவதாகக் கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள், முகவர்கள் என ஏராளமானோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், செய்யார், உத்திரமேரூர் மற்றும் மானாமதி பகுதிகளில் ஆருத்ரா நிதி நிறுவன முகவராக நாகராஜ் என்பவர் செயல்பட்டு வந்தார்.

இவர், 2021 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெம் நகர் பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன் (63) மற்றும் சுகுணா தேவி (59) என்ற வயதான தம்பதியினரை அணுகி ஆசை காட்டி உள்ளார். அதிக வட்டி கிடைக்கும் எனக்கூறி வயதான அந்த தம்பதியினரின் வீட்டை விற்க வைத்து அந்தப் பணத்தை முதலீடு செய்ய வைத்ததாக தெரிகிறது. அவர்கள் வீட்டை ரூ.26 லட்சத்திற்கு தனது பெயருக்கு நாகராஜ் மாற்றிக் கொண்டு, அதில் ரூ.6 லட்சத்தை முதியவர் ஸ்டீபனின் வங்கி கணக்கிற்கு செலுத்தி விட்டு, மீதமுள்ள ரூ.20 லட்சத்தை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.

2021ஆம் ஆண்டு ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ரூ.20 லட்சம் முதலீடு செய்து 3 மாதங்கள் மட்டுமே, மாதம் ஒரு லட்சம் என ஸ்டீபன் தம்பதிகளுக்கு கொடுக்கப்பட்டது. கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மோசடி அம்பலமாகி அதன் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முடக்கினர்.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான முகவர் நாகராஜை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்த நாகராஜ் , பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினருக்குத் தெரிவிக்காமல் மறைத்த தன்னுடைய பல சொத்துக்களை விற்க முயற்சித்து செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அந்த வகையில் ஸ்டீபன், சுகுணா தேவி வசிக்கும் வீட்டை விற்க முயன்ற நாகராஜ், தனது ஆதரவாளர்கள் மற்றும் அடியாட்களுடன சென்று வயதான தம்பதியினரின் செல்போனை பிடுங்கி கொண்டு அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினார். வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி வீசிவிட்டு, வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு சென்றார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சி தாலுகா காவல் துறையினர் இருதரப்பையும் விசாரணை செய்தனர். சட்டத்துக்குப் புறம்பாக வீட்டுக்குள் சென்று வீட்டு பொருட்களை வெளியே வீசியது குற்றம் எனக்கூறி முகவர் நாகராஜை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் வயதான தம்பதியினரின் வீட்டிலுள்ள பொருட்களை அடியாட்களுடன் சென்ற ஆருத்ரா நிதி நிறுவன முகவர் நாகராஜ், தூக்கி வெளியே வீசும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சைடிஷ் சாப்பிட்டதால் இளைஞர் வெட்டி கொலை.. கொலையாளி கைது..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.