கள்ளக்குறிச்சி: மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரிகொடா இயக்கத்தின் சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது வேல்முருகன் உடன் வந்திருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதில் சுங்கச்சாவடியிலிருந்த கணினி, கண்காணிப்பு கேமரா மற்றும் மென்பொருள்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட 14 பேர் மீது உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு
இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி இந்த வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்மீது பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கு மீண்டும் இன்று (அக்.7) உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிபதி சண்முகநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன் உள்பட 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கு வருகின்ற 28ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: காவல் ஆய்வாளர் வசந்தியின் கணவர் 1 மணிநேரத்தில் ஆஜராக வேண்டும் - நீதிமன்றம் கறார்