கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் சொந்தமாக பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான இரு பசு மாடுகளும், அப்பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவரது பசு மாடும் உளுந்தூர்பேட்டை சேலம் சாலையிலுள்ள சுடுகாடு பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்தது.
அப்போது சுடுகாட்டிலிருந்த மோட்டார் பம்பில் அறுந்து கிடந்த மின்சார ஒயரின் மீது மாடுகள் கால் வைத்ததில் மூன்று பசு மாடுகளும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த பசுமாடுகளை பரிசோதனை செய்தனர்.
இப்பகுதியில் மின்சாரம் தாக்கி மனிதர்கள் மட்டுமல்லாமல் மாடுகளும் தொடர்ந்து உயிரிழந்து வருவதற்கு காரணம் மின்சாரத் துறை அலுவலர்களின் அலட்சியப் போக்கே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், உயிரிழந்த மாடுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மாட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி!