ETV Bharat / state

பஞ்சாயத்துத் தலைவராக இருவர் அறிவிக்கப்பட்ட விவகாரம் - ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Nov 10, 2021, 6:03 PM IST

பஞ்சாயத்து தலைவராக இருவர் அறிவிக்கப்பட்ட விவகாரம்
பஞ்சாயத்து தலைவராக இருவர் அறிவிக்கப்பட்ட விவகாரம்

கள்ளக்குறிச்சியில் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் முதலில் ஒருவர் வெற்றி பெற்றதாகவும், பின் மற்றொருவர் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு விசாரணையில் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலை வட்டத்திலுள்ள 'இந்நாடு' கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதில், போட்டியிட்ட ஜெயக்கொடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், சில மணி நேரங்களில் விஜயா என்பவர் வெற்றி பெற்றதாக மறு அறிவிப்பை வெளியிட்டனர். இதை எதிர்த்து ஜெயக்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று (நவ.10) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், 675 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்து தேர்தல் அலுவலர் கையெழுத்துடன் அளிக்கப்பட்ட ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள்

அந்த ஆவணத்தை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி நவம்பர் 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்றதாக எவரும் உரிமை கோரக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்குப் பதிலளிக்கும்படி இரண்டாவதாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவருக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.