ETV Bharat / state

உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி

author img

By

Published : Oct 14, 2020, 4:52 PM IST

Updated : Oct 15, 2020, 5:24 AM IST

ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகம்
ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகம்

15:42 October 14

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் 200 நாள்களுக்கு பிறகு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 3 மணி நேரத்தில் ரூபாய் ஒரு கோடியே 25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பிரதானமாக விளங்கும் ஆடு சந்தைகளில் உளுந்தூர்பேட்டை சந்தையும் ஒன்று. கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் கரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சந்தை தொடர்ந்து 200 நாள்களாக மூடப்பட்டிருந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்து தளர்வுகளோடு ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில், கடந்த வாரம் உளுந்தூர்பேட்டை வார சந்தையில் காய்கறி சந்தை தொடங்கியது. தொடர்ந்து இந்த வாரம் முதல் ஆட்டு சந்தை நடைபெறும் என பேரூராட்சி மூலம் அறிவிக்கப்பட்டது. அதன்படி  ஆட்டுச்சந்தை நேற்று (அக்.14) அதிகாலையில் தொடங்கியது.

இதில், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், செங்கல்பட்டு, சேலம், புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் ஆட்டுச் சந்தையில் குவிந்தனர்.  

இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று காலை 7 மணி முதல் 10 மணி வரை சுமார் 3 மணி நேரத்தில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் இரண்டாயிரம் ஆடுகள் 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.

விற்பனையான ஆடுகளின் மதிப்பு ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம் இருக்கும் என கருதப்படுகிறது. 200 நாள்களுக்கு பிறகு ஆட்டுசந்தை நடைபெற்றதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Last Updated :Oct 15, 2020, 5:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.