வேட்புமனு நிராகரிப்பு - சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது!

author img

By

Published : Sep 24, 2021, 8:22 PM IST

சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

தியாகதுருகம் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி : தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. வேட்புமனு மீதான பரிசீலனை நேற்று (செப்.23) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

வேட்புமனு நிராகரிப்பு

அதன்படி, கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வேட்புமனு மீதான பரிசீலனையில் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டனர். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் முறையான விளக்கம் அளிக்காததை கண்டித்தும், நிராகரிக்கப்பட்ட வேட்புமனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு, அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு தலைமையில் அதிமுகவினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உள்ளிருப்பு போராட்டத்தின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அதிமுகவினர் வேட்புமனுவை மறுபரிசீலினை செய்ய வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், தியாகதுருகம்-உளுந்தூர்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

50-க்கும் மேற்பட்டோர் கைது

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால் தலைமையிலான காவல்துறையினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு, ஒன்றிய கழக செயலாளர் அய்யப்பா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தற்போது, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதையும் படிங்க : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.