அரசு பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர் இல்லை - மாணவர்கள் பாதிப்பு

author img

By

Published : Aug 1, 2022, 10:27 PM IST

அரசு பள்ளியில் நிரந்தர ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் பெரும் அவதி-  பெற்றோர்கள் முற்றுகை..!

கெட்டிசெவியூரில் உள்ள அரசு பள்ளியில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு அரசு மாதிரி ஆங்கில பள்ளி தொடங்கப்பட்டது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கொண்டு வரப்பட்டதால் கெட்டிசெவியூர், காளியப்பம்பாளையம், பள்ளிபாளையம், அரளிமலை, தோரணவாவி, ஒட்டவலுவு, பூச்சநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மாணவர்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தனர்.

ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்ட முதலாமாண்டே தனியார் பள்ளிகளில் படித்துக்கொண்டு இருந்த மாணவர்கள் உட்பட 450 மாணவ, மாணவிகள் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இங்கு ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் வேறு வழியில்லாத நிலையில் 14 ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக நியமித்து மாதம் தோறும் ஒவ்வொரு பெற்றோர்களிடமும் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை வசூல் செய்து, ஆசிரியர்கள், இரண்டு தூய்மை பணியாளர்கள், 2 உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்கி வந்தனர்.

அப்பகுதி மக்கள் கோரிக்கை

கடந்த ஆண்டு முழுவதும் பெற்றோரிடம் வசூல் செய்து சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் கடந்த 3 மாதங்களாக பெற்றோர்களிடம் வசூல் செய்து சம்பளம் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாததால் இந்த ஆண்டு 125 மாணவ, மாணவிகள் வேறு பள்ளிக்கு சென்று விட்டதாக கூறப்பபடுகிறது. இதனால் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் திரண்டு பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறும் போது, தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி மாணவர்களை சேர்க்க முடியாத நிலையில் தான் அரசு பள்ளியில் சேர்த்து இருக்கிறோம். கடந்த ஆண்டு ஆசிரியர்கள் இல்லை என்பதாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக மாதம் தோறும் பணம் செலுத்தி வந்தோம். கூலி வேலைக்கு செல்லும் எங்களை போன்றவர்களால் பணம் செலுத்த முடியாது. அதனால் அரசு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் அல்லது தற்காலிக ஆசிரயர்களையாவது அரசு சம்பளத்தில் நியமிக்க வேண்டும் என்றனர்.

இதையும் படிங்க:போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.