ஒரு காலத்தில், நகர்மயமானதன் பரபரப்புக்குள் வீழாத கோபி என்ற கோபிசெட்டிபாளையத்தில் பேருந்திலிருந்து இறங்கி, அய்யர் வீடு எங்கே என சின்னக் குழந்தையைக் கேட்டால்கூட அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிடும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவருக்கு அந்தளவுக்கு மதிப்பும் மரியாதையும்!
சாதி, மத வேறுபாடு எதுவுமின்றி இந்தப் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் லட்சுமணனை பார்க்கலாம். சுகம், துக்கம் எதுவானாலும் லட்சுமணனுக்கு அழைப்பு வந்துவிடும், அவர் அங்கேயிருப்பார்.
இவருடைய தந்தை டி. சீனிவாச அய்யர். இவர் அந்தக் காலத்தில் கோபி, பவானி, கொள்ளேகால் இரட்டை உறுப்பினர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். 1931இல் மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று லட்சுமண அய்யரின் வீட்டுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு விருந்துவைக்கப்பட்டது. சும்மா விடுமா, சொந்தமும் சமுதாயமும். 1931 முதல் 1936 வரை அய்யரின் குடும்பம் முற்பட்ட சமுதாயத்தினரால் புறக்கணிப்பு செய்யப்பட்டது.
1938 முதல் 1944 வரையிலான காலகட்டத்தில் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற அய்யர், கோவை, அலிப்பூர், பெல்லாரி, வேலூர், பவானி எனப் பல்வேறு சிறைகளில் மூன்றரை ஆண்டுகளைக் கழித்திருக்கிறார். மனைவி, மாமனார், மாமியாரெல்லாமும்கூட இவருடன் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றிருக்கின்றனர்.
1944இல் வார்தா சென்று மூன்று நாள் தங்கியிருந்த லட்சுமண அய்யரிடம், 'நீ பிராமணன்தானே, விடுதலைப் போராட்டத்துக்கு நிறைய பேர் இருக்கிறார்கள், ஊருக்குத் திரும்பியதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்யத் தொடங்கு, அதுவே என்னுடைய விருப்பம்' என்று ஆணையிட்டிருக்கிறார் மகாத்மா காந்தி. கடைசி வரையிலும் காந்தியின் கட்டளையை நிறைவேற்றுவதில் கண்ணும்கருத்துமாக இருந்தார் அய்யர்.
துப்புரவுத் தொழிலாளர்களை ஊருக்குள்ளே அழைத்துவந்து குடியிருப்புகளைக் கட்டித் தந்தவர் அய்யர். அரசியல் தலைவர்களை பொறுத்தவரையில் அந்த நாள்களில் ஒரு சத்திரம் போலத்தான் இவருடைய வீடு. எந்நேரமும் சமையல் நடந்துகொண்டிருக்கும். இங்கு உணவு உண்ட தலைவர்கள்...
- சித்தரஞ்சன் தாஸ்,
- ராஜேந்திர பிரசாத்,
- ராஜாஜி,
- அருணா ஆசப் அலி,
- டாக்டர் அன்சாரி,
- சீனிவாச அய்யங்கார்,
- காமராஜர்,
- பெரியார் என பட்டியல் நீண்டுகொண்டேச் செல்லும்.
1969இல் காங்கிரஸ் பிளவுற்றபோது காமராஜரின் ஸ்தாபன காங்கிரசில் பணியாற்றத் தொடங்கி, ஜனதா தளத்திலும் அய்யர் தொடர்ந்தார். ஆனால், அவருடைய செயல்பாடுகள் அன்றாட அரசியலுக்கு அப்பாற்பட்டவையே.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம் ரத்து செய்தபோது, ராஜாஜி கூறிய அறிவுரைப்படி, நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த ஒரேயொரு சிறுவனுக்காக விடுதியை அய்யர் தொடங்கியுள்ளார். இவர் அப்போது தொடங்கிய அந்த விடுதியில், தற்போது இருக்கக்கூடிய பெரும்பாலானவர்கள் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். அந்தக் காலத்தில் இவர்கள் குடும்பத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நஞ்சையும் புஞ்சையுமாக 380 ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால், இப்போது அவர் குடியிருந்த வீடுதான் மிச்சம். ஒரு வீட்டைத் தவிர, இரு மகன்களுக்கும் ஒரு சென்ட் நிலம்கூடத் தரவில்லை. இவர் கொடையென வழங்கிய இடங்களில்தான் இன்றைக்குக் கோபிசெட்டிபாளையத்திலுள்ள பல கல்வி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
வைர விழா மேநிலைப் பள்ளி, பழனியம்மாள் பள்ளி, டி.எஸ். சாரதா வித்தியாலயம், விவேகானந்தா ஐ.டி.ஐ. என பள்ளிகளை சொல்லலாம். இன்னும், ஸ்ரீராமபுரம் ஹரிஜன காலனி, துப்புரவுத் தொழிலாளர்களுக்கான காலனி... உள்ளிட்டை அனைத்தும் அய்யரின் இடங்களில் கட்டியதுதான்.
அய்யரின் மறைவுக்காக ஒரேயொரு பள்ளி மட்டும் விடுமுறை அறிவித்தது. 1952 முதல் 1955 வரையிலும் 1986 முதல் 1992 வரையிலுமாக இரண்டு முறை கோபி நகர்மன்றத் தலைவராகவும் இருந்தவர் அய்யர். 1955இல் அய்யர் கொண்டுவந்ததுதான் கோபி நகர் குழாய்த் திட்டம். புஞ்சைப் புளியம்பட்டி செல்லும் சாலையில் கோபிக்கான நீரேற்று நிலையம் இருக்கும் இடமும்கூட அய்யருடையதுதான். 1986இல் இவருடைய காலத்தில்தான்- கோபிசெட்டிபாளையத்தில் - முதன்முதலாக மனிதக் கழிவை மனிதன் சுமக்கும் அவலம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
அரசு நிதியுதவியுடன் அனைத்து உலர் கழிப்பிடங்களும் நீரடிக் கழிப்பிடங்களாக அய்யர் காலத்தில்தான் மாற்றப்பட்டன. ஆனால், அத்தகைய அய்யருடைய மரணத்தின்போது அவரால் பயன் பெற்ற, பலன் பெற்ற பெரும்பாலானோர் வரவில்லை. அன்றைக்குக் கோபிசெட்டிபாளையம் வழியேதான் மாவட்ட ஆட்சியர் சென்றார், வரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் வரவில்லை, சட்டப்பேரவை உறுப்பினர் வரவில்லை. நகர்மன்றத் தலைவிகூட வரவில்லை. கோட்டாட்சியர் மட்டும் வந்தார், வாழ்நாள் முழுவதும் வழங்கிக் கெட்ட தியாகிக்கு அஞ்சலி செலுத்த அல்ல, தியாகிகள் செத்தால் வழங்கப்படும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகையை வழங்குவதற்காக வந்தனர். அந்தத் தொகையையும் உடனே தாழ்த்தப்பட்டோர் தங்கும் விடுதிக்குத் தந்துவிட்டனர் குடும்பத்தினர். அய்யரின் விருப்பப்படியே அவருடைய கண்களும் தானமாக வழங்கப்பட்டன.
போர்த்தலாமா கூடாதா என்பதை உறுதி செய்ய முடியாத குழப்பத்தில் அவருடைய சடலத்தின் மீது தேசியக் கொடிகூட போர்த்தப்படவில்லை. பிராமணக் குடும்பங்களில் மரணத்துக்காக அவ்வளவாக அழ மாட்டார்கள் என்பார்கள். ஆனால், லட்சுமண அய்யரின் சடலம் கிடத்திவைக்கப்பட்டிருந்தபோது ஒரேயொரு பெண் மட்டும் கடைசி வரை கதறியழுது கொண்டிருந்தார். அவர், அய்யர் வீட்டில் அவருக்குப் பணிவிடை செய்துவந்த தாழ்த்தப்பட்ட பெண்!