ETV Bharat / state

நீட் தேர்வில் சாதனை புரிந்த சேலம் மாணவர்கள்! சிறப்பு பேட்டி!

author img

By

Published : Jul 17, 2023, 12:57 PM IST

நீட் தேர்வில் சாதனை புரிந்த சேலம் மாணவர்கள்
நீட் தேர்வில் சாதனை புரிந்த சேலம் மாணவர்கள்

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் 569 மதிப்பெண் பெற்று சேலம் அரசு பள்ளி மாணவி சி.கே கிருத்திகா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

சேலம்: தமிழகத்தில் எம்பிபிஎஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேலத்தைச் சேர்ந்த மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.கே கிருத்திகா 569 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி சி.கே கிருத்திகா, கடந்த முறை நீட் தேர்வில் 211 மதிப்பெண்களை மட்டுமே பெற்றிருந்தார்.

தற்போது ஒராண்டுக்கு பின் மீண்டும் முயற்சி செய்து தேர்வு எழுதியதில் அரசுப் பள்ளி ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். மேலும், சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர். அர்ச்சனா 537 மதிப்பெண்களுடன் மாநில அளவில் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மருத்துவப் படிப்பிலும், அரசு ஒதுக்கீடு பிரிவிலும் சேலம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சேலம் சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர் வருண் 715 மதிப்பெண்களுடன் மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், அதே பள்ளி மாணவர் கவியரசு 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் 7 ஆவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவியருக்குப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சால்வை அணிவித்து கேக் ஊட்டி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி சி.கே கிருத்திகா கூறுகையில், “கரோனா தொற்று காலத்தில் பிளஸ் 1 பாடங்களை படிக்க முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து, பிளஸ் 2 தேர்வுக்குப் பின்னர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்குப் படித்தேன். 2022 ஆம் ஆண்டில் நீட் தேர்வில் 211 மதிப்பெண்களை பெற்றேன். எனவே மீண்டும் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். கடந்த ஓராண்டில் நிறைய பயிற்சி தேர்வுகளை எழுதி தவறை சரி செய்து கொண்டேன்

எனது தாய் கலைச்செல்வி, ஆத்தூர் நீதிமன்ற ஊழியராக உள்ளார். எனது தாய், உறவினர், ஆசிரியர்கள் ஆகியோர் அளித்த ஊக்கத்தில் இரண்டாவது முறை நீட் தேர்வை நன்றாக எழுதி 569 மதிப்பெண் பெற்றேன். பொதுமக்கள், மருத்துவர்களை பார்ப்பதைத் தவிர்த்து மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி உட்கொள்ளும் நிலை உள்ளது. பொதுமக்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவராக ஆசைப்பட்டேன்.

குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என்பது இலக்காகும். ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். அதேபோல மாநில அளவில் 6 ஆவது இடம் பெற்ற தோழி ஆர்.அர்ச்சனாவும் நானும் வகுப்பு மற்றும் பயிற்சி மையங்களில் ஒன்றாகப் படித்தோம்” என்று தெரிவித்தார்.

மருத்துவ தர வரிசைப் பட்டியலில் மாநில அளவில் 6 ஆவது இடம் பிடித்த சேலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.அர்ச்சனா கூறுகையில், “கடந்த 2022 இல் பிளஸ் 2 தேர்வில் 546 மதிப்பெண் பெற்றேன். அரசின் பயிற்சி மையத்தில் ஒரு மாதம் மட்டுமே பயிற்சி பெற்று நீட் தேர்வில் 254 மதிப்பெண் பெற்றேன்.

எனவே மருத்துவம் படிக்கும் ஆர்வத்தில் ஓராண்டு காத்திருந்து பயிற்சி பெற்று இரண்டாவது முறை நீட் தேர்வு எழுத தனியார் பயிற்சி மையத்தில் படித்து 537 மதிப்பெண் பெற்றேன். பாடங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு படித்தேன். அதேபோல ஒரே கேள்வியை பல்வேறு வடிவங்களில் தயாரித்து விடை எழுதி பயிற்சி பெற்றேன். மருத்துவராக வேண்டும் என்பதை விட நீட் தேர்வை வெற்றி கொள்ள வேண்டும் என்பது தான் முக்கிய இலக்காக இருந்தது. நரம்பியல் சிகிச்சை நிபுணராக வேண்டும். அதேபோல ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிசிச்சை வழங்க வேண்டும் என்பது விருப்பமாகும்” என்று கூறினார்.

மூன்றாம் இடம் பிடித்த சேலம் மாணவர் வருண் கூறுகையில், “எனது பெற்றோரின் கனவை நனவாக்கி இருக்கிறேன். எனக்கு எம்பிபிஎஸ் முடித்த பிறகு நரம்பியல் துறையை தேர்ந்தெடுத்து அதில் சிறந்த மருத்துவராக விளங்க வேண்டும் என்பது கனவாக உள்ளது” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மாணவர் கவியரசு கூறுகையில், “மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நீட் தேர்வில் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் 7 வது இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எனது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் பெரும் உதவி புரிந்தனர். மருத்துவர் கனவை இந்த வெற்றி மூலம் நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மருத்துவ தரவரிசைப் பட்டியல் வெளியீடு - வரும் ஜூலை 25 முதல் MBBS கவுன்சிலிங்கிற்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.