கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வானது ஒத்திவைக்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக தேர்வினை நடத்த முடியாததால் பொதுத்தேர்வை ரத்து செய்த பள்ளிக்கல்வித்துறை, பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வருகைப்பதிவேடு அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்குமாறு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் 100 விழுக்காடு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் மாமரத்துப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கு மிகவும் குறைவான மதிப்பெண்களை அளித்துள்ளதாகவும், இதனால் மாணவ மாணவிகளின் உயர்கல்வி பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி 50க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், பள்ளி நிர்வாகம் வழக்கமாக காலாண்டு அரையாண்டுத் தேர்வுகள் நூறு என்ற அடிப்படையில் மதிப்பெண்களை வழங்காமல் 85 என்கிற அளவீட்டுடன் மதிப்பெண்களை வழங்குவதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கேட்கையில், குறைவான மதிப்பெண்களை வழங்கினால் மாணவர்களுக்கு உத்வேகம் கிடைக்கும் என்ற நோக்கில் முன்னர் நடைபெற்ற காலாண்டு மற்றும் அரையிறுதி தேர்வில் மதிப்பெண்களைக் கணக்கிட்ட முறையைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதே முறையினை பொதுத்தேர்வுக்கும் கணக்கிட்டு வழங்கியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அதனை முறையிட்டு சரிசெய்து கொள்ளலாம் எனக்கூறியதன் பேரில் அனைத்து பெற்றோர்களும் தனித்தனியாக வேண்டுதல் கடிதம் கொடுத்தோம். அதே மதிப்பெண்களை வழங்கக் கோரி இப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பெற்றோரின் போராட்டத்திற்கு பிறகும் பள்ளி நிர்வாகம் எவ்வித சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பது பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து புகார்களை வழங்கவும் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பள்ளியில் ஆங்கிலம், தமிழ் மட்டுமே கற்றேன்' - கனிமொழி எம்.பி.,