ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் சேர்ந்த காந்தி என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது, "கடந்த 25.12.2021 அன்று எனது மனைவி காயத்ரியை மருத்துவ பரிசோதனைக்காக (டயாலிலிஸ்) பெருந்துறை சாலையில் உள்ள சுதா மருத்துவமனையில் அனுமதித்தேன்.
அப்போது, மருத்துவமனையின் ஏர் கன்டிஷனர் குளிர் தாங்காமல் என் மனைவிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் என் மனைவி மருத்துவமனையில் சேர்த்த ஒருமணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நான் இதுகுறித்து நிர்வாகத்திடம் கேள்வி எழுப்புகையில், கார்டியாக் அரெஸ்ட் மூலம் எனது மனைவி இறந்ததாகவும், அதில் நிர்வாகத்தின் தவறு ஏதும் இல்லை எனவும் மருத்துவர் நாகேந்திரன் கூறினார்.
மனைவியின் இறப்பை நேரில் பார்த்த என்னிடமே அவர்களின் அனைத்து தவறுகளையும், அலட்சியப்போக்கையும் மறைத்தனர்.
இதில், பாஜக மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர். சரஸ்வதி, சுதா மருத்துவமனையில் தவறு நடந்து விட்டது எனவும் இழப்பீடு பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார். இருப்பினும், இரு மாதங்களாகியும் இழப்பீடு வழங்கவில்லை. தற்போது, சட்டப்படி பார்த்துக்கொள்ளுங்கள் என்கின்றனர்' எனக் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்தவரின் கணவரும், அவர் சார்ந்த அகில இந்திய நாடார் வாழ்வுரிமைச் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திருமண வரவேற்பு: குவாட்டரும் சிக்கனும் வழங்கிய மாப்பிள்ளை!