ஈரோடு மாவட்டம் அந்தியூர் சந்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சாந்தி கூலித் தொழிலாளி . இருவருக்கும் மகள் மற்றும் மகன் உள்ளனர். மகன் விஜய் ஆப்பக்கூடலிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் ஏப்ரல் 26ஆம் தேதி விஜய் தனது வீட்டின் அருகே இருந்த பனை மரத்தின் மீது ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் விஜய்க்கு முதுகு தண்டுவடம், இரண்டு கால்கள் ஆகிய பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
விஜய் கடந்த நான்கு நாள்களாக ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை முடித்துக் கொண்டு அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்கு குறைந்த பட்சம் நான்கு லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கூலித் தொழிலாளியின் நிலையை அவரது உறவினர்கள் ஈரோடு அதிமுக சட்டபேரவை உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் கவனத்திற்கு கொண்டு சென்றனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வாலிபரின் நிலைமை குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடிக் கவனத்திற்கு சட்டபேரவை உறுப்பினர் சார்பில் கொண்டு செல்லப்பட்டது.
உடனே முதலமைச்சரின் காப்பீட்டுத் தொகையை ஒரு மணி நேரத்தில் மருத்துவமனைக்கு கிடைத்திடும் வகையில் முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனையடுத்து விஜய்க்கு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்தே அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின் விஜய்யின் முதுகுத் தண்டு வடமும் கால்களும் சீரானது. தற்போது அவர் நலமாக உள்ளார். தனது மகனின் உயிரைக் காப்பாற்றி கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும் சட்டபேரவை உறுப்பினருக்கும் விஜய்யின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.