ETV Bharat / state

கீழ்பவானி கான்கிரீட் திட்டம்: செயல்படுத்தப்படுமா (அ) ரத்து செய்யப்படுமா?

author img

By

Published : May 23, 2023, 3:15 PM IST

Keel Bhavani concrete project
கீழ்பவானி கான்கிரீட் திட்டம்

தமிழ்நாடு அரசு கீழ்பவானி கான்கிரீட் திட்டத்தை செயல்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி கீழ்பவானி பாசன விவசாயிகள் தொடர் போராட்டத்தில் வருகின்றனர்.

கீழ்பவானி கான்கிரீட் திட்டம் செயல்படுத்தப்படுமா (அ) ரத்து செய்யப்படுமா?

ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் அணை, ஈஸ்வரன் என்ற சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை அடுத்து காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணை கீழ்பவானி கால்வாய் 200 கி.மீ. தூரத்திற்கு மண் கால்வாயாக வெட்டப்பட்டது.

மேலும் இந்த அணையில் இருந்து வெளியேறும் நீரின் மூலம் கீழ்பவானி கால்வாய், தடப்பள்ளி அரக்கன்கோட்டை கால்வாய், காளிங்கராயன் கால்வாய் பாசனம் மூலம் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்த பவானிசாகர் அணை தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையாகவும் ரஷ்யாவில் உள்ள மண் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மண் அணையாகவும் பவானிசாகர் அணை திகழ்ந்து வருகிறது.

தற்போது இந்த அணையில் இருந்து முக்கியமான வாசகப் பகுதியாக இருந்து வருவது கீழ்பவானி பாசனம். இந்த கீழ்பவானி பாசனம் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகின்றது. இந்த நீரைக் கொண்டு விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்ட பல பயிர்களை பயிரிட்டு பாசனம் பெற்று வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது மறைமுகமாக பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுவதுடன் குடிநீர் ஆதாரமாகவும், கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் இந்த கால்வாய் இருந்து வருகிறது. நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாக இந்த மண் கால்வாய் வெட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்கு பாசனம் அளித்து வருகிறது.

தற்போது இந்தக் கால்வாய் வெட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதால் மராமத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்போது இருந்த திமுக ஆட்சிக்காலத்தில் மோகன கிருஷ்ணன் கமிட்டி குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் முன்பாக திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சி தொடங்கியதால் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2011 - 2013ஆம் ஆண்டில் இந்தத் திட்ட வரைவு கொண்டுவரப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்த முடிவு செய்தபோது விவசாயிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக அப்போது இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இந்தத் திட்டத்தை ரத்து செய்தார்.

அதன் பிறகு 2016ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் 2018ஆம் ஆண்டு மீண்டும் கையில் எடுக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு 720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 2020 பிப்ரவரி 26ஆம் தேதி பாரதப் பிரதமர் மோடி கோவையில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் தொடங்கிய காலத்தில் இருந்தே ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும், ஒரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்த காரணமாக இத்திட்டம் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்த முடியாமல் இருந்து வந்தது. தற்போது கீழ்பவானி பாசன கால்வாயில் பழுது ஏற்பட்டுள்ளதால் கால்வாயில் 33 சதவீதம் மட்டுமே கசிவு நீர் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 50 சதவீதம் வரை கசிவு நீர் வருவதால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று அடைவதில்லை.

தண்ணீர் வீணாக செல்வதுடன் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வருவதால் பாசன கால்வாயைக் காப்பாற்ற வேண்டும் என்றால் உடனடியாக கால்வாயைச் சீரமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பு விவசாயிகள் கான்கிரீட் திட்டம் அமைக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டால் கால்வாயின் இரு பகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு பாலைவனமாக மாறும்.

மேலும் கால்நடைகளுக்கு தீவனம் இல்லாமல் போகும் என விவசாயிகள் கூறுவதுடன், ’’ஆயக்கட்டு பாசனம் இல்லாது வலது கரையில் இருக்கும் இந்த கால்வாயின் நிலத்தடி நீரை நம்பியுள்ள பாசன நிலங்கள் பாதிக்கப்படும். இந்த பாசன கால்வாய் வெட்டுவதற்காக நிலம் வழங்கிய விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். நிலத்தடி நீர் சரிவூட்டும் திட்டமாகத்தான் இந்த கால்வாய் வெட்டப்பட்டது. மண் கால்வாயை மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும்.

இந்த கால்வாயில் பழைய கட்டுமானங்களை மட்டுமே பராமரிக்க வேண்டும்’’ என ஒரு தரப்பு விவசாயிகள் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு 2 தரப்பு விவசாயிகளின் பிரச்னை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் முடங்கி கிடந்தது.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தனர். இந்நிலையில் கான்கிரீட் திட்டம் அமைப்பதற்கு ஆதரவாக இருந்த விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் மே 1ஆம் தேதி முதல் கீழ்பவானி கால்வாயில் பணிகளைத் தொடங்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்தால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்பதால் எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகள் எங்கள் திட்டத்திற்கான அரசாணை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தனித்தனியாக மனு அளித்த விவசாயிகள் இந்த கீழ்பவானி கால்வாயின் பாசன பகுதியில் உள்ள கிராமங்களில் இன்று கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசும் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது எனக் கூறிய நிலையில், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது அரசாணை ரத்து செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழக வீட்டு வசதி வாரிய அமைச்சர் சு.முத்துசாமியும் தொடர்ச்சியாக இரண்டு தரப்பு விவசாயிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு அரசுக்கு கீழ்பவானி பாசன விவசாயிகள் மூலமாக பெரும் தலைவலியை இந்தத் திட்டம் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவின் படி இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுமா? விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசாணையை ரத்து செய்து பழைய கட்டுமானங்களை மட்டுமே பராமரிப்பு செய்யுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதையும் படிங்க: மான் கொம்பு... பில்லி சூனியம்; நிர்வாண பூஜையால் சிக்கிய சாமியார்: தேனியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.