தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் நீர்த்தேக்க பகுதியானது, நீலகிரி கிழக்கு சரிவு வனப்பகுதி, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் பரந்து விரிந்த நீர்தேக்க பகுதியில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் வெளிநாட்டு பறவைகள் முகாமிட தொடங்குவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. பெலிக்கான் பறவை, வெள்ளை நாரை உள்ளிட்ட பறவைகள் நீர்த்தேக்க பகுதிக்கு ஓரம் அமைந்துள்ள பாறைகள், காய்ந்த மரங்களில் முகாமிட்டுள்ளன.
தற்போது வெளிநாட்டு பறவைகள் வருகை தொடங்கியுள்ளதாகவும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இன்னும் பல்வேறுவிதமான பறவைகள் இங்கு வந்து முகாமிடும் என அணையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பட்ஜெட்டிற்குப் பின் தொழில் துறையினரை சந்தித்த நிதி அமைச்சர்