ETV Bharat / state

"தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 10:33 AM IST

Updated : Nov 21, 2023, 11:39 AM IST

EVKS Elangovan criticized the TN Congress
தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை - ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்

EVKS Elangovan criticized the TN Congress: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தனக்குத் தெரியவில்லை என்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தை, கட்சியின் மூத்த தலைவர்களுக்குச் சொல்லாமல் மர்மமாக கூட்டுவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை - ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொதுக்கணக்கு குழுத் தலைவர் செல்வபெருந்தகை, "ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் தரம் குறித்தும், காலதாமதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் கலவை தரம் சந்தேகமாக இருப்பதால், சிமெண்ட் கலவைத் தரம் குறித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியருக்கு விருதுகள் வழங்க, அரசுக்கு பொதுக்கணக்கு குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், “தமிழகத்தில் உள்ள ஆளுநருக்கு, அடிப்படையில் சில பிரச்னைகள் உள்ளது, அவருக்கு மனநிலை சரியில்லை என்று நினைக்கிறேன். ஆளுநர் நடவடிக்கையில் கடந்த நான்கு நாட்களில் பல மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதலில் அவர் மனிதராக மாற வேண்டும் என விரும்புகிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. முன்பெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் என்றால், என்னைப் போன்றவர்களுக்கு அழைப்பு வரும். ஆனால், தற்போது ஏன் என்று தெரியவில்லை, மர்மமான கூட்டமோ என்று தெரியவில்லை. பத்திரிகை வாயிலாகத்தான் சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிந்து கொண்டேன்.

மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு என்று சொல்லவில்லை. என்னைப் பொறுத்தவரையில், முதலில் முன்னாள் தலைவர்கள் என்று சொன்னார்கள், பிறகு மூத்த தலைவர்கள் என்று சொன்ன நிலையில், தற்போது முடிந்து போன தலைவர்கள் என்று சொல்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “செந்தில் பாலாஜி தலையில் இருந்து கால் வரை உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் முதலில் தகுந்த சிகிச்சை தர வேண்டும். ஐந்து மாநில இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி பஞ்ச பாண்டவர்கள்போல் வெற்றி பெறுவோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "கூட்டுறவுத் துறையில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும் " - அமைச்சர் துரைமுருகன்

Last Updated :Nov 21, 2023, 11:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.