ETV Bharat / state

மர்மமான முறையில் ஆண் புலி உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை!

author img

By

Published : Jul 26, 2023, 5:01 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் புலி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. இங்கு சுமார் 25க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ள இந்தப் பகுதியை பாதுகாப்பதில், அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் வனப்பகுதியில் நாள்தோறும் வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்று, வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்து வரும் நிலையில், வழக்கம்போல் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகம், கொத்தமங்கலம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றுள்ளனர்.

அப்போது ஒரு வறண்ட நீரோடையில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள், அப்பகுதியில் வனவிலங்குகள் ஏதாவது இறந்து கிடக்கிறதா? என்ற அடிப்படையில் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு உடல் அழுகிய நிலையில் புலி ஒன்று இறந்து கிடப்பதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அதிர்ச்சி அடைந்த வனத்துறை அதிகாரிகள், சம்பவம் குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராஜ்குமார் உத்தரவின் பேரில், துணை இயக்குநர் வெங்கடேஷ் முன்னிலையில் வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் இறந்த புலியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்துள்ளார்.

இதில் உயிரிழந்த புலி ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் புலி எனத் தெரிய வந்துள்ளது. புலியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என மருத்துவர் கூறியுள்ளார். இதனை அடுத்து, புலியின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஹைதராபாத் உயிரியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவுகளுக்குப் பிறகு புலி இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து புலியின் உடல் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தீயிட்டு எரிக்கப்பட்டது.

ஒரே வனப்பரப்பில் புலி, யானை, கழுதைப் புலி, வெளிமான் ஆகிய விலங்குகள் வாழும் உலகின் அரிய வன விலங்குகள் வாழும் இடமாக தமிழகத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்தியாவில் மிக சிறப்பாக மேலாண்மை செய்யப்பட்டு வரும் புலிகள் காப்பகம் என்ற அடிப்படையில் அதற்கான விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பெற்றிருந்தது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த புலிகள் காப்பகம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி ஒன்று உயிரிழந்திருப்பது வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன உயிர் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: 60 அடி கிணற்றில் விழுந்த முதியவர் - 3 நாள்களுக்குப் பின் உயிருடன் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.