தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சிவாஜி என்பவர் தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.
இருசக்கர வாகனத்தில் ஒலிப்பெருக்கி அமைத்து அதன் மூலம் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டிருக்கும் அவர், கடந்த 25ஆம் தேதி கரூரில் ஆரம்பித்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை ஆகிய பல்வேறு மாவட்டங்களைக் கடந்து இன்று ஈரோடு வந்தடைந்தார்.
ஒவ்வொரு மாவட்டமாக செல்லும் இவர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் துறை கண்காணிப்பாளர் , மாவட்ட ஆட்சியரை சந்தித்து அந்த மாவட்டங்களில் ஆழ்துளைக் கிணறுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகிறார். அதற்கு சான்றாக ஒவ்வொரு மாவட்ட அலுவலர்களிடமும் விழிப்புணர்வு கையெழுத்தினை பெற்று வருகிறார்.
மேலும், அந்த மாவட்டங்களுக்கு செல்லும் இவர் செல்லும் வழியெங்கும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்குகிறார். மாநிலம் முழுவதும் 6500 கிலோமீட்டர் தூரத்திற்கு விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இவர் ஓய்வுபெற்ற பிறகும் தனது உடலில் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டாலும் இப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்காட்ட உள்ளதாகவும், இந்த பரப்புரையின் மூலம் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை பற்றியும் நன்கு அறிந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்காக குப்பையை சேகரிக்கும் பொறியாளர்!