செல்போனில் கேம் விளையாடியதைக் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

author img

By

Published : Dec 7, 2021, 12:03 PM IST

செல்லதுரை

ஆன்லைனில் கேம் விளையாடிய மகனை, தாய் திட்டியதால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்: புளியம்பட்டி கிராமத்தில் வசித்துவருபவர் அழகம்மாள் (48). இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது இரண்டு மகன்கள், ஒரு மகளை கூலி வேலை செய்து வளர்த்துவந்துள்ளார்.

ஏற்கனவே ஒரு மகன், மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்த நிலையில் மூன்றாவது மகனான செல்லதுரையுடன் வசித்துவந்தார். செல்லதுரை செங்குறிச்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்புப் பயின்றுவந்தார்.

இவர் தனது மகன் ஆன்லைன் வகுப்பில் பயில வேண்டும் என்பதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பு செல்போன் வாங்கித் தந்துள்ளார். பாடம், கற்றுக்கொள்ளாமல் செல்லதுரை செல்போனில் வீடியோ கேம் விளையாடிவந்தார்.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுவரும் நிலையில் செல்லதுரை படிப்பில் கவனம் செலுத்தாமல் விடியோ கேம் விளையாட்டிலேயே அக்கறை காட்டிவந்தார். இதையறிந்த அழகம்மாள் பலமுறை செல்போனில் விளையாடுவதை நிறுத்திவிட்டுப் படிக்கச் சொல்லி வந்துள்ளார்.

டிசம்பர் 1ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த செல்லதுரையை அழகம்மாள் படிக்கச் சொல்லித் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த செல்லதுரை விவசாயத்திற்காக வைத்திருந்த கண்வலிக்கிழங்கு விதையைச் சாப்பிட்டுள்ளார்.

இதில் மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவம் பெற்றுவந்த செல்லதுரை சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை (டிசம்பர் 2) உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் வகுப்புக்காக வாங்கித் தந்த செல்போனால் மாணவனுக்கு வீடியோ கேம் விளையாட்டில் ஆர்வமானது. அதை தாய் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

தற்கொலை எண்ணங்களைத் தவிருங்கள்

சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள்.

சிநேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050
மாநிலத் தற்கொலை தடுப்பு உதவி எண்: 104

இணையவழித் தொடர்புக்கு: 022-25521111
மின்னஞ்சல்: help@snehaindia.org

நேரில் தொடர்புகொள்ள:

சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட்,

11, பூங்கா சாலை (Park view road), ஆர்.ஏ.புரம்,

சென்னை - 600028

இதையும் படிங்க: பாபர் மசூதி இடிப்பு தினம் - உச்சகட்ட பாதுகாப்பில் கோயம்புத்தூர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.