ETV Bharat / state

பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்தி விழாவுக்கு தடை - பக்தர்கள் அதிர்ச்சி!

author img

By

Published : May 5, 2023, 6:43 PM IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் போகர் ஜெயந்தி விழாவிற்குத் தடை விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Palani
திண்டுக்கல்

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், போகர் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது. அதன்படி, பழனி கோயிலில் உள்ள நவபாஷாண மூலவர் சிலையை செய்த போகர் சித்தருக்கு, அவரது பிறந்த தினத்தன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்படும். இந்த போகர் ஜெயந்தி விழா பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருவதாகத்தெரிகிறது. இந்த ஆண்டு போகர் ஜெயந்தி விழா வரும் மே 18ஆம் தேதி கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், போகர் ஜெயந்தி விழா நடத்த கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் நடராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். போகர் ஜெயந்தியன்று கோயில் நிர்வாகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்; கோயில் நிர்வாகம் தரப்பில் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கோவில் இணை ஆணையர் நடராஜன் பிறப்பித்துள்ள தடை ஆணையில், "போகர் சந்நிதி பூசாரிகள், விதிகளை மீறி, திருக்கோயில் பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும், ஆகம விதிகளுக்கு முரணாகவும் தன்னிச்சையாகவும் போகர் ஜெயந்தி விழாவை நடத்த ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிகிறது. இதனால், போகர் சந்நிதியில் 'போகர் ஜெயந்தி' என்ற பெயரில் திருவிழா ஏதும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

போகர் சந்நிதி பூசாரிகள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு இடையூறாக செயல்பட்டு வருவதால், வரும் 18ஆம் தேதி அன்றும் அவர்கள் பிரச்னையில் ஈடுபட முகாந்திரம் உள்ளது. அதனால், அன்றைய தினம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கவும் காவல்துறையிடம் கோயில் நிர்வாகம் சார்பில் கோரப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் போகர் ஜெயந்தி விழா நடைபெறுமா? என்ற குழப்பத்தில் பக்தர்கள் உள்ளனர்.

அண்மைக்காலமாக கோவில் இணை ஆணையருக்கும், போகர் ஜெயந்தி விழாவை நடத்தும் புலிப்பாணி ஆசிரம நிர்வாகிகளுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வரும் நிலையில், போகர் ஜெயந்தி விழாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி சிவன் கோயிலில் ஏராளமானோர் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.