ETV Bharat / state

நாசா காலண்டரில் இடம்பெற்ற பழனி பள்ளி மாணவிகள் ஓவியம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 2:23 PM IST

painting of Palani students is featured in the NASA calendar
பழனி மாணவிகளின் ஓவியம் நாசா காலண்டரில் இடம்பெற்றுள்ளது

NASA 2024 Calendar: நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டு காலண்டரில் பழனி மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

பழனி மாணவிகளின் ஓவியம் நாசா காலண்டரில் இடம்பெற்றுள்ளது

திண்டுக்கல்: பழனி அருகே புஷ்பத்தூரில் ஸ்ரீ வித்யா மந்திர் என்ற சி.பி.எஸ்.இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு படிக்கும் மாணவி துகிலோவியா, 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லயாஷினி, 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகா ஆகியோர் வரைந்த ஓவியங்கள், 2024ஆம் ஆண்டின் நாசா விண்வெளி காலண்டரில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் காலண்டர் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் காலண்டரில் இடம்பெறும் 12 பக்கங்களுக்கும், ஒவ்வொரு தலைப்புகள் கொடுக்கப்பட்டு, உலகளவில் போட்டிகள் நடத்தப்படும். அதில் தேர்வாகும் படங்களை காலண்டரின் 12 மாதங்களுக்கான பக்கங்களில் பிரசுரிப்பது வழக்கம்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு காலண்டருக்கான போட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் உலகளவில் 194 நாடுகளில் இருந்து, 4 வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்டனர். அந்த வகையில், இந்த போட்டியில் பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளின் புகைப்படங்கள் வெளியானது!

இதில், ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் பயிலும் மாணவி துகிலோவியா (1ஆம் வகுப்பு), மாணவி லயாஷினி ( 4ஆம் வகுப்பு), மாணவி தித்திகா (7ஆம் வகுப்பு) ஆகியோர் சூரிய குடும்பம், ராக்கெட் மற்றும் விண்வெளி கிராஃப்ட், விண்வெளியில் வீரர் ஆகிய தலைப்புகளில் வரையப்பட்ட ஓவியங்கள், நாசா வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டிற்கான காலண்டரின் அட்டைப் படத்தில் இடம் பெற தேர்வாகி உள்ளது.

மேலும், இந்த ஓவியம் அச்சிடப்பட்ட காலண்டர்கள், தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட உள்ளன. உலகளவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவில் இருந்து 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றதில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகளின் ஓவியம் தேர்வாகி சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து 5வது முறையாக பழனி ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஓவியங்கள் நாசா விண்வெளி காலண்டரில் இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது‌. இந்நிலையில், ஓவியம் வரைந்து சாதனைப் படைத்த மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: பொங்கலோ..பொங்கல்.. புத்தாடை உடுத்தி பாரம்பரியப்படி பொங்கலிட்டு அசத்திய வெளிநாட்டினர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.