நியாயவிலைக் கடைகளில் கொள்முதல் இல்லை - சில்லறை விற்பனையில் இறங்கிய கரும்பு விவசாயிகள்

author img

By

Published : Jan 12, 2022, 8:17 PM IST

கரும்பு விவசாயிகள்
கரும்பு விவசாயிகள் ()

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கரும்பு கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் விவசாயிகள் சில்லறை விற்பனையைத் தொடங்கியுள்ளனர். மேலும், பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், இதுவரையில் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்காக அரசு கொள்முதல் செய்யவில்லை எனக் கவலைத் தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், கோமணம்பட்டி, மூங்கில்பட்டி, கணவாய்ப்பட்டி, கன்னியாபுரம், சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயம் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. ஓராண்டு பயிரான கரும்பு தற்போது மகசூல் பருவத்திற்கு வந்துள்ளது. வரும் பொங்கலுக்காக இவை விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன.

பொதுவாக மதுரை, திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் நேரில் வந்து கரும்புகளைக் கொள்முதல்செய்வது வழக்கம். டிசம்பர் மாத தொடக்கத்திலேயே விவசாயிகளிடம் முன்தொகை கொடுத்து முன்பதிவு செய்துகொள்வர். விளைநிலங்களில் நேரடியாகக் கரும்புகளை அறுவடை செய்து 10 கரும்பு கொண்ட கட்டுகளாகக் கட்டி வெளியூர்களுக்கு அனுப்பிவைப்பர்.

சில்லறை விற்பனையில் இறங்கிய கரும்பு விவசாயிகள்

கடந்த ஆண்டு கரோனா காலகட்டமாக இருந்தாலும் ஒரு டன் ஆறாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை விற்பனை ஆன நிலையில் இந்த ஆண்டு நியாயவிலைக் கடைகளில் கரும்புகள் வழங்கப்பட்டுவருவதால் ஒரு டன் 4000 ரூபாய் விலைக்குகூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது வெளியூர் வியாபாரிகள் வராததால் விளைந்துள்ள கரும்புகளை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தோட்டத்திலேயே சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.40 என விற்கத் தொடங்கியுள்ளனர்.

பொங்கலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்காக கூட்டுறவுச் சங்கத்திலிருந்து இதுவரையில் கொள்முதல் செய்யவில்லை. இதனால் விலையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக 10 எண்ணிக்கை உள்ள ஒரு கட்டு மொத்த விலையில் 300 முதல் 500 ரூபாய் வரை விற்பனையாகும். வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்யாததால் இதன் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்பு விவசாயிகளே வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கரும்புகளை கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜிக்கு தொடரும் சிக்கல்..மேல் நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் புகார் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.