ETV Bharat / state

திமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... 8 பேர் சரணடைந்த காரணம் என்ன?

author img

By

Published : Jul 22, 2023, 1:30 PM IST

eight people surrendered in DMK member murder case
திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொலை வழக்கு

திண்டுக்கல்லில் முன் பகை காரணமாக திமுக பிரமுகரை கொலை செய்த 8 நபர்கள் அருப்புக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

திண்டுக்கல்: தீப்பாச்சி அம்மன் கோயில் அருகே உள்ள கொல்லம் பட்டறைப் பகுதியைச் சேர்ந்தவர், சரவணன். இவரது தந்தை இரும்புப் பட்டறை வைத்துள்ளார். மேலும் பட்டறை வேலை செய்து வந்ததால் இவருக்கு அடைமொழியாக பட்டறை சரவணன் என நண்பர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளார். தற்போது திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு திருமணமாகி பவதாரணி என்ற மனைவி மற்றும் வேதமித்திரன் என்ற 2 வயது மகன் உள்ளனர். தனது குடும்பத்துடன் வ.உ.சி நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். மேலும் இவர் மீது கொலை, கொலைமுயற்சி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று (ஜூலை.21) இரவு திண்டுக்கல் அண்ணாநகர் தைலத்தோப்பில், தனது 2 வயது குழந்தையுடன் விளையாடச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். அப்பொழுது அண்ணாநகர் அருகே உள்ள சாலையில் வந்தபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரவணனை கத்தி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கழுத்து, தலை மற்றும் உடம்பில் பல இடங்களில் வெட்டியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது குழந்தைக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை குற்றவாளிகளைத் தேடி வந்தனர். முதல்கட்ட விசாரணையில், சரவணனை முன் பகை காரணமாக கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

அதாவது, கொலை செய்யப்பட்ட சரவணனின் நண்பரான பேகம்பூர் நத்தர்ஷா தெருவைச் சேர்ந்த பார்த்த என்ற இப்ராம்ஷா என்பவரை, திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரபல ரவுடியும் இந்திய தேசிய லீக் முன்னாள் மாநில இளைஞரணி தலைவருமான அல் ஆசிக் என்ற ஆசிக் முகமது மிரட்டிப் பணம் கேட்டது தொடர்பாக அல் ஆசிக்கும், சரவணனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

அது நடந்த சில நாட்களுக்குப் பிறகு, அதாவது கடந்த 2021ஆம் ஆண்டில் பார்த்தா என்ற இப்ராம்ஷாவை அல் ஆசிக் தரப்பினர் குட்டியபட்டி அருகே வைத்து கொலை செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தான் அல் ஆசிக்கிற்கும், சரவணனுக்கும் நேரடி மோதல் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் அல் ஆசிக்கின் தன்பாலின சேர்க்கை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வெளிவரத் தொடங்கியுள்ளது.

இதற்குக் காரணம் சரவணன் தான் என நினைத்த அல் ஆசிக் சரவணனை கொலை செய்ய நீண்ட நாட்களாகத் திட்டம் தீட்டி, பல நாட்களாகப் பின் தொடர்ந்து வேவு பார்த்து, தனது ஆதரவாளர்களுடன் நேற்று சம்பவ இடத்தில் வைத்து கொலை செய்தது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் 1.அல் ஆசிக் என்ற ஆசிக் முகமது, 2.முகமது மீரான், 3.கலீல் அகமது, 4.சதாம் உசேன், 5.முகமது இர்ஃபான், 6.சக்தி மகேஸ்வர், 7.முகமது அப்துல்லா, 8.சேக் அப்துல்லா ஆகிய 8 பேரும் குற்றவியல் நடுவர் முன் சரண் அடைந்தனர்.

அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்த 8 பேரையும் போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஜே.எம் 2 நடுவர் மீனாட்சி முன்பு ஆஜர் படுத்தினர். தற்போது சரணடைந்த 8 பேரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டு, மீண்டும் 04-08-2023 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து அந்த 8 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் 8 பேரையும் வரும் திங்கட்கிழமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "கோவையில் ஒரு ஃபகத் பாசில்": வளர்ப்பு நாயை அடித்துக் கொன்ற நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.