தருமபுரி: மான்காரன் கொட்டாய் கிராமத்தில் சிவன் கோயில் அமைந்துள்ளது. கோயில் வழியாக இன்று (பிப்.27) காலை சென்றவர்கள், கோயிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள், கோயிலுக்கு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 ஆசாமிகள் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
இதுகுறித்து மதிகோன்பாளையம் காவல் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கோயிலுக்கு அருகே கட்டப்பட்டு வரும் பள்ளிக் கூடத்தில் பொருட்களைத் திருட நேற்று முன்தினம் வந்ததாகவும், நாய்கள் குறைத்ததால் அங்கிருந்து ஓட்டம் பிடித்து இரவு கோயிலுக்குள் சென்றதாகத் தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு திருட முயற்சி செய்து, பூட்டை உடைத்தபோதும் அப்பகுதியில் உள்ள நாய்கள் ஒன்று சேர்ந்து குறைத்ததால் வெளியே வர பயந்து கொண்டு கோயிலுக்குள்ளேயே இருந்ததாகவும், பின்னர் குடிபோதையில் தூங்கி விட்டதாகத் தெரிவித்தனர். தொடர்ந்த இருவரிடமும் அவர்கள் வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளனரா? என்று காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டம்மி துப்பாக்கியுடன் திருநங்கையிடம் சில்மிஷம்.. யூடியூபர்ஸ் கைது!