ETV Bharat / state

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 6:58 PM IST

Etv Bharat
Etv Bharat

Two girls drowns and dead: தருமபுரி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற சிறுமிகள் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தம்மனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகசபாபதி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மூத்த மகள் சஞ்சனாஸ்ரீ (7), இளைய மகள் மோனிகாஸ்ரீ (5), மூன்றாவது 3 வயதில் மகன் உள்ளார். இவர்களது பெற்றோர் இருவரும் விவசாய பணிகளுக்காக சென்றிருந்தனர்.

அப்போது, வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளும், வீட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள தம்மனம்பட்டி ஏரிக்கு சைக்கிளில் சென்றுள்ளனர். தம்பியை கரைக்கு மேலே அமரவைத்துவிட்டு இரண்டு பெண் குழந்தைகளும் ஏரியில் மீன் பிடிப்பதற்காக இறங்கியுள்ளனர்.

சேறு நிறைந்த பகுதிக்குச் செல்லவே சேற்றில் சிக்கி இரண்டு பெண் குழந்தைகளும் நீரில் மூழ்கின. செய்வதறியாது திகைத்துப் போய் இருந்த 3 வயது சிறுவன் அழுதுகொண்டிருந்தான். இதற்கிடையே, வீட்டில் குழந்தைகள் இல்லாததைக் கண்ட பெற்றோர், அக்கம் பக்கத்தில் விசாரித்து ஏரி அருகே சென்றனர்.

அங்கு, தனியாக சிறுவன் மட்டும் கரையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விசாரித்த போது, சிறுமிகள் இருவரும் ஏரிக்குள் இறங்கியது தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோர் கதறி சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் ஏரியில் குதித்து நீரில் மூழ்கி, சேற்றில் சிக்கியிருந்த இரண்டு பெண் குழந்தைகளையும் சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதியமான் கோட்டை காவல் துறையினர், சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வயதான தம்பதி கொடூரமாக கொலை: நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலுக்கு போலீஸ் வலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.