ETV Bharat / state

தருமபுரி மாரண்டஅள்ளி அருகே சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் பீதி; வனத்துறை விடுத்த வார்னிங்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 6:22 PM IST

Dharmapuri leopard: தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், மலை அடிவார கிராம மக்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

மாரண்டஅள்ளி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

தருமபுரி: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவ்வப்போது, வனப்பகுதியை ஒட்டிய கிராம பகுதிகளுக்குள் யானை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து பயிர்களையும் கால்நடைகளையும் சேதப்படுத்துவது வழக்கம். அவ்வாறு வரும் விலங்குகளைப் பாதுகாப்பாக வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்து வருகின்றனர்.

மாரண்டஹள்ளி அடுத்த மலைப்பகுதியை ஒட்டி சாமனூர், படகாண்டஹள்ளி, கொக்கிகல் மலைப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு நாய், கோழி, ஆடு போன்ற வளர்ப்புப் பிராணிகளை கொன்று வருவதாக பேசப்படுகிறது. திடீரென மலை உச்சியில் ஒரு விலங்கு அமர்ந்திருந்தை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து பார்த்துள்ளனர். அதனையடுத்து அதனை உற்றுப் பார்த்தபோது, அது 'சிறுத்தை' என தெரியவந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து பாலக்கோடு வனத்துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதும் செல்போனில் பதிவான காட்சிகள் குறித்து தெரிவித்துள்ளனர். இதில், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சாமனூர், படகாண்டஹள்ளி, கொக்கிகல் பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள மலைக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் இன்று (நவ.1) விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், மேலும் வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். சிறுத்தை கால்நடைகள் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பு வழங்கப்படும்.

பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவது, இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்கவேண்டும். அதேபோல், வனவிலங்குகள் அச்சுறுத்துவதாக நினைத்து வன விலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் மின்சாரம் வைப்பது, நாட்டு வெடி குண்டுகள் வைப்பது போன்ற வனவிலங்குகளை துன்புறுத்துவது மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

அவ்வாறு ஈடுபட்டால், 'வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். அப்போது வனத்துறையினரிடம் பொதுமக்கள் கிராமத்திற்குள் இதுவரை சிறுத்தை வரவில்லை எனவும் எந்த கால்நடைகளையும் இதுவரை சேதப்படுத்த வில்லை கிராமத்தை ஒட்டி சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அச்சமாக உள்ளது என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரூரில் பெண்ணிடம் அத்துமீறிய கந்து வட்டி கும்பல்.. 2 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.