சொத்து பிரிப்பதில் பிரச்சனை: டிரான்ஸ்பாரத்தில் ஏறி இளைஞர் போராட்டம்

author img

By

Published : Jun 30, 2022, 10:43 PM IST

சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை: மின்சார டிரான்ஸ்பாரத்தில் ஏறி போராட்டம் செய்த வாலிபர்

தர்மபுரியில் பூர்வீக சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைக்கக்கோரி டிரான்ஸ்பாரத்தில் ஏறி இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தர்மபுரி: பென்னாகரம் அடுத்த கே.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் என்பவரின் மகன் வினோத் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஏரியூர் பிடிஒ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வினோத்தின் தந்தை கருப்பண்ணனுக்கும் அவருடைய சகோதரர் குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக பூர்வீக சொத்து பிரிப்பதில் பிரச்சனை இருந்து வருகிறது.

வினோத்துக்கு சேர வேண்டிய பங்கு முறையாக அளவிட்டு பிரித்து தராததால், வினோத் ஒகேனக்கல் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனக் கூறி வினோத், இன்று (ஜூன் 30) கே.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பாரத்தில், மின்சாரத்தை அவரே துண்டித்து விட்டு மேலே ஏறி அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இளைஞர் போராட்டம்

இதனால் அங்கு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வினோத்திடம் பலர் சமாதானம் பேசியும் இறங்கி வராததால் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த ஒகேனக்கல் காவல்துறையினர் வினோத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் சமாதானம் அடைந்த வினோத் கீழே இறங்கி வந்தார். வினோத்தை காவல்துறையினர் விசாரணைக்காக ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நிலப்பிரச்சனையை தீர்க்க வேண்டி டிரான்ஸ்பாரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கிராம மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர்.

இதையும் படிங்க: ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட ஆண்டிபட்டி வட்டாட்சியருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.