தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அதிமுக சார்பில் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் போதை பொருட்கள் முறைகேடுகளை கட்டுப்படுத்த கோரி அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி திடீரென 'எம்ஜிஆர்' நடித்த 'பரிசு' திரைப்படத்திலிருந்து 'எண்ண எண்ண இனிக்குது' பாடலில் வரும் 'கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை கண்ணால் அடித்த அடி வலிக்கிறது' என்ற பாடல் வரிகளை சொல்லி திமுகவினரை கண்டித்து பேசினார்.
அப்போது, மேடைக்கு கீழே இருந்த தொண்டர்கள் பாடலை பாடுங்கள் எனக் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து பாடலை ரீமேக் செய்து 'ஓட்டு போட்ட போது தெரியவில்லை, நீங்கள் ஆட்சி அமைத்த போதும் புரியவில்லை, கரண்ட் பில் ஏறிய போது நோகுதடா, வீட்டு வரி ஏறிய போதும் நோகுதடா' என பாடலை பாடினார். உடனே மேடைக்கு கீழே இருந்த தொண்டர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து பேசிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, "கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது கண்துடைப்பு நாடகம் இது கள்ளச்சாராயத்தை ஊக்குவிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு. மின்சாரம் பாய்ந்து உயிர் உயிரிழப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய், யானை மிதித்து உயிரிழப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தான் வழங்குகிறார்கள். கள்ளச்சாரயம் விற்பவர்கள் திமுககாரர்கள் தான் அவர்களை கேள்வி கேட்ககூடாது என்பதர்காக தான் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளனர்" என குற்றம் சாட்டி பேசினார்.
மேலும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கியதாக நிரூபித்தால் நான் பதவி விலக தயார். இல்லை என்றால் நீங்கள் விலக தயாரா? என சவால் விட்டார். திமுகவின் இரண்டு ஆண்டு சாதனை விளம்பரத்தில் 2000 பேருந்துகள் வாங்கியதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஏதாவது ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஏதாவது ஒரு அமைச்சர் ஏதாவது ஒரு பேருந்து தமிழகத்தில் வாங்கி இருப்பதாக தெரிவித்தால் நீங்கள் சொல்வதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். பதவி விலக தயாராக இருக்கிறீர்களா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: ‘செந்தில் பாலாஜி வாங்கும் 10 ரூபாயில் ஸ்டாலினுக்கும் பங்கு உண்டு’ - சிவி சண்முகம்