தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஏப்.9) தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கே.வி.ராமராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்தகுழுவினர் தொப்பூர், குறிஞ்சி நகர் பகுதியில் இயங்கும் வள்ளலார் அறிவாலயம் என்ற குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தினை ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் இயங்கும் குழந்தைகள் நலக் குழு அலுவலகம், தர்மபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினார்.
அப்போது குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள், போக்சோ வழக்கு, எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கிராமிய குழுக்கள் செயல்படுகிறதா உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரோனா காலத்தில் தர்மபுரி மாவட்டத்தில் ரகசியமாக சில இளம்வயது திருமணங்கள் நடந்துள்ளன. இவ்வாறான செயல்களை தடுக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தர்மபுரி மாவட்டத்தில் ‘சைல்டு லைன்’ அமைப்பின் செயல்பாடு விரைவில் தொடங்கும். தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் உள்ளிட்ட 164 வழக்குகள் தொடர்பாக நீதிமன்றம் பரிந்துரைத்த இடைக்கால நிவாரணம் வழங்க ரூ.4.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பின்னர் விரைவில் அந்தத் தொகை உரியவர்களுக்கு வழங்கப்படும்” என்றார்.